வேண்டும் விடுதலை/உண்மையான இனமுன்னேற்றம் என்பது உரிமை மீட்பே!

விக்கிமூலம் இலிருந்து

 
உண்மையான இன முன்னேற்றம்
என்பது உரிமை மீட்பே!


மிழர்கள் இன்றைக்குத் தங்களை ஈடேற்றிக் கொள்ளச் செய்து கொண்டிருக்கும் ஒட்டு மொத்தமான முன்னேற்ற முயற்சிகளில், முதலில் செய்ய வேண்டிய தலையாய முயற்சி, தமிழின உரிமை மீட்பு முயற்சியே, என்பது பலவகையான ஆய்வுகளுக் கிடையே தெளியப்பெற்ற உண்மையாகும். எவ்வளவு பெரிய அறிஞரோ, ஆராய்ச்சியாளரோ, சாய்கால் உள்ள தலைவரோ இன்றைக்கு இதை அறியாமையாலோ, அறிந்தோ, மறுத்தாலும் நாளைக்கு இக்கருத்தையே உண்மை என்று ஒப்புக் கொள்ளப் பெறும். காலம் வரத்தான் வரப்போகிறது. கடந்த 25 ஆண்டுக் காலமாக நாம் இதை மிகவும் அழுத்தமும் திருத்தமுமாகவே கூறி வருகிறோம். அன்றைக்கு இதை ஏளனப் படுத்தியவர்கள் இழிவாகப் பேசியவர்கள், எதிர்த்தவர்கள் கூட இன்றைக்கு நேரடியாக இல்லாமற்போனாலும், தங்கள் சாய்காலை இழந்து கொள்ளாத நிலைக்கு இலை மறை காயாகவேனும், பேசியும் எழுதியும் வருவதைக் குமுகாய மாறுபாடுகளை மிகவும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டு வருபவர்கள் கட்டாயம் உணருவார்கள்.

தமிழ்மொழியைப் பற்றியே பேசாதவர்கள் கூட இன்றைக்கு ஆங்காங்கே தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். தமிழ் இனம் என்று பேசாமல் திராவிட இனம் என்று பேசியே எழுதியே வந்தவர்கள், எங்கு எதிர்காலம் தங்களைப் புறக்கணித்து விடுமோ என்று அஞ்சி 'சாற்றில் மலம் கிடக்கிறது; கொஞ்சம் இறுத்தால் போல் ஊற்று’ என்னும் பாணியில், அடிக்கடி தமிழினம் தமிழினம் என்று பேசுவதும், 'தமிழா இன எழுச்சி கொள்' என்று கடந்த இருபத்தைந்தாண்டுகளாகக் கூறிவரும் உணர்வுக்குரலை உரிமை முழக்கத்தை, ஏதோ இப்பொழுதுதான் இவர்கள் புதிதாகக் கண்டு சொல்பவர்களைப் போல, நொடிக்கு நூறு முறை கூறிப் புரட்சிக்குக் கட்டியங்காரர்களாக நடந்து கொள்வதையும், பார்க்கிறோம். இன்னும் சிலர் குமரிக்கண்ட வரலாற்றையும் பஃறுளியாற்றின் கடல்கோளையும் கூட கூட்டங்கள் தோறும் எடுத்து முழக்கும் வழக்கம் கூடிவருகிறது. இவற்றாலெல்லாம் நமக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியே. நாம் தாம் சொன்னோம், செய்தோம் என்பதில் தமிழர்களுக்குள் போட்டியிருப்பதும், அவ்வினத் தாழ்ச்சிக்கு ஒரு காரணமே! நமக்கு வேண்டுவதெல்லாம், யார் குத்தி அரிசியானாலும் நல்லது என்பதுதான். இவையிவற்றை இத் தமிழினம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் நமக்கு முகாமையானது. அவற்றை யார் செய்கிறார்கள் என்னும் பொறாமைப் பார்வையன்று. வெறும் ஆரியம், திராவிடம் என்றும், திராவிட நாடு திராவிடர்க்கே என்றும் கூறப் பெற்ற பொழுதிலும்கூட நாம் அவற்றை மறுத்துத் திராவிடம், என்பது சரியான கொள்கையன்று என்றும் தமிழம் என்பதும். ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்பதுந்தாம் வரலாற்று அடிப்படையில் சரியானதாகும். என்றும் எழுதியும் பேசியும் வந்தோம். ‘தென்மொழி’ தன்னை வெளிப்படுத்திக் கொண்டபொழுதே தனிநாட்டுக் கோரிக்கையைத்தான் முன் வைத்தது. அதன்பின் மற்ற அரசியல் கட்சிகள் எங்கெங்கோ சுற்றி மூக்கைத் தொட்டு வந்து அக் கொள்கையால் விளைவு வரும் இந்நேரத்தில் நாம் தொடக்கத்தில் வரையறுத்த “மொழியால் இனம். இனத்தால் நாடு” என்னும் மெய்ம்மத்தை உள்ளட்க்கிய ‘மொழி, இனம், நாடு’ என்னும் நம் முப்படி முழக்கத்தைச் சிலர் ஏதோ தங்களின் மூலக் கொள்கையைப் போல் முழங்கத் தொடங்கியுள்ளனர். எஃது எவ்வாறாயினும், நம் முயற்சிகளால் வரும் விளைவுகளுக்காகவே அனைத்து நிலைகளிலும், நாம் பொறாமையற்ற, வஞ்சனையற்ற, பயனைக் கூறுபோட்டுக் கொள்ளாத நடுநிலைப் பார்வையால் காலத்தை எதிர்பார்த்திருக்கின்றோம். இது நிற்க.

தமிழினத்தின் உண்மையான முன்னேற்ற முயற்சிகளை விரும்பும் நாம் அனைவரும். அவரவர்களுக்குச் சரியான வழிவகை என்று நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொள்கைகளின் வழியில் பாடாற்றி வருகின்றோம். அவற்றுள், “தமிழர்க்கென்று தனி நாடு தேவையில்லை; அவர்கள் இந்தியத் தேசியத்தில் இணைந்து விடுவதே அனைத்து நிலைகளுக்கும் நன்மை பயப்பது, தேசிய ஒருமைப்பாட்டைத் தவிர்த்துப் பிரிவினை பேசுவதால் பயனில்லை” என்பது. வடவர்க்கும் பார்ப்பனியத்திற்கும் ஏற்கனவே தம் தம் சிந்தனைகள் , செயல்கள் ஆகியவற்றை அடகுவைத்து விட்டு, அடிமைப்பட்டுப்போன தந்நலக்காரர்களின் கூற்று. இவ்விரண்டுங் கெட்டான்களின் அடிமைக் கொள்கையால், அத்தேசியக்கங்காணிகளுக்கே நன்மையாகுமேயன்றி, தமிழின மக்களுக்கு என்றைக்கும் ஓர் எள்ளளவும் நன்மையோ முன்னேற்றமோ கிடைக்கப் போவதில்லை.

அடுத்தபடி, பொதுவுடைமை என்னும் ஓர் உண்மையான இன முன்னேற்ற மெய்ம்மைக் கொள்கையின் பெயரால் போலித்தனமான அரசியல் குமுகாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, உருசியாவுக்கும் போகாமல்,சீனாவுக்கும் செல்லாமல், இடையில் தில்லியிலேயே விழுந்து கிடக்கும், சாதி மதவுணர்வுகள் சாகா மனங்கொண்ட பொக்கைப் பொதுவுடைமைக் காரர்களால் தமிழினத்திற்கோ, தமிழ்நாட்டுக்கோ எவ்வகை விளைவும் எக்காலத்திலும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இத்தகையவர்களின் பேச்சுக்கோ செயலுக்கோ எவ்வகைத் தொடர்புமில்லை. இந்த உலகம் அழியுமட்டும் இவர்கள் நின்று கொண்டிருக்கும் குழப்ப மேடையில் இருந்து இவர்கள் அகலப் போவதுமில்லை. இவர்களுக்கு ஒரு தேசிய இன உரிமை என்பதிலேயே தெளிவான கருத்து இல்லை. ‘இந்தியத் தேசியம்’ என்னும் மாய்மாலக் கோட்டைக்குள் புகுந்து கொண்ட இவர்கள் வெளிவருவது கடினம்.

இனி, இவர்களையும் தவிர்த்து, இங்குள்ள சிலர் காலத்தால் நசுங்கிய, காந்தியின் பெயராலும், கருமமே கண்ணாகக் கொண்ட காமராசரின் உழைப்பாலும், பேராய வெள்ளையடித்துக் கொண்டு அவ்வப்பொழுது, தமிழ் என்று வாய்ச்சிலம்பமாடுவதும், தமிழர் நலன் என்று கைக்கம்பு வீசுவதுமாக, வெள்ளை ஊர்திகளில் வீதியுலா வந்து, தங்களின் சாதிக் கோட்டையின் வலிவான கதவுகளுக்குப் பின்னால் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களால் இந்நாட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு சிற்றெறும்புக்கும், ஒரு சிறு அளவினும் நன்மையில்லை. இவர்கள் அள்ளிக்கொடுக்கும் காசுகளுக்கு அங்காந்து திரியும் சாதிச் சாரணர்களே இவர்களின் ஐந்தாம் படைத் தொண்டர்கள்! இவர்களின் ஆரவாரக் கூப்பாடுகளில் இத்தலைவர்கள் மெய் மயங்கிக் கிடப்பதே இவர்களின் வாழ்க்கை. இவர்களின் பொய் போலி, உரைகள், இவர்கள் ஊரைவிட்டுப் போனதும், வெறும் குப்பைக் காற்றாகச் செயலிழந்து போவதை அனைவரும் கண்டிருக்கலாம். இவர்களால் தமிழும் தமிழினமும் ஓர் இம்மி அளவாகிலும் முன்னேறும் என்பது ஊமையன் கண்ட ஒரு நொடிக் கனவே ஆகும்.

இனி, இன்னோரையும் அடுத்து, அன்று முதல் இன்று வரை, ஆட்சியைப் பிடித்தாலன்றி நம் இனத்திற்கு ஆவது ஒன்றுமில்லையென்று அறைகூவல் விடுத்து, இடையில் சிலகாலம் பதவி நலம் கண்டு சுவைத்திருந்தாலும், தமிழர் நலத்திற்கென்று அடித்தளமான ஓர் ஆக்கத்தையும் செய்யாமல், உருப்படியான ஒரு சிறு விளைவையும் உருவாக்காமல், பேச்சோ, பேச்சென்று பேசி முழக்கியே வாணாளை வீணாளாக்கி இறுதியில் மனம் நொடிந்து ஊடாடிக் கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தின் தலைமைக் கூட்டமும், தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் இனிமேல் செய்வது ஒன்றுமில்லை என்றும், செய்தனவும்(!) செய்து வருவனவுமே(!) போதுமென்னும் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. இனி, இறுதி வாய்ப்பாகத் தங்களுக்கு ஆட்சிக்கட்டிலில் அமர ஒரு வாய்ப்புக் கிடைத்தால், திடுமென இவ்வினத்துக்குத் தன்னாலான அத்துணையும் செய்து விடுவோம் என்று வாயலப்பிக் கொண்டிருப்பது என்றுமே நிறைவேறி விடப் போவதில்லை.

‘செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்’

- என்னும் செயலின் மாறுபாட்டிலக்கணத்திற்கு முழு இலக்கியமாகிய இவ்வியக்கம், இருமுறை பதவிக்கு வந்தும், இரண்டு நிலைகளாலும் கெட்டது. முதன்முறை செய்தக்க அல்லாதவற்றைச் செய்ததால் கெட்டதும், இரண்டாம் முறை செய்தக்க செய்யாமையாற் கெட்டதும், வேறு எவர்க்கும் விளங்காமற் போனாலும், அதன் வேளாண்மையாளர்க்கும் அறுவடையாளர்க்கும் விளங்கியிருக்கும். இனி, பழைய நிலை, புதுப்பிக்கப் பெற்று, மணல்மேடு குடியிருப்பாக மாறும் என்பது அத்தைக்கு மீசை முளைத்தால் என்னும் கதையைப் போன்றதே! நெஞ்சு துணுக்குற்றாலும் உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும். எனவே, ஆற்றொணாக் கவலையோடுதான் இக் கருத்தை இங்கே வெளிப்படுத்துகிறோம்.

அடுத்து, ஆட்சி மாளிகையை மக்களின் அறியாமை மேட்டில் கட்டிக்கொண்டு, கவர்ச்சி வண்ணம் பூசிக் கைம்மை நோன்பு நோற்று, ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும் என்பதற்கிணங்க, மூங்கை நாடாகமாடிக் கொண்டு வீணான சாரவுணவுத் திட்டத்திலும், சாராயக் கிடங்குகளிலும் திரைப்படக் கூத்தாட்டங்களிலுமே சிற்தனையைப் பேரக்கி, எதிர்கால மக்கள் நலத்திட்டம் என்ற எண்ணமே இல்லாமல், அவ்வப்பொழுதைய ஆரவாரத்திற்கும், கொள்ளையடிப்புகளுக்கும் தக்கவாறு, வடநாட்டு அரசியல் வல்லாண்மைக்காரர்களிடமும், சுரண்டல் முதலாளிகளிடமும் பேரம்பேசி, ஊதியத்தில் பங்கு போட்டுக் கொண்டு சாப்பசி தணிக்கும் சதுர ஆட்டக் காரர்களின் பெரியாரிச, அண்ணாயிசக் கொள்கைத் திராவிடர்களுக்கோ, தமிழ் நலத்திலும் ஊற்றமில்லை; தமிழர் முன்னேற்றத்திலும் நாட்டமில்லை. அவர்கள் நினைப்பவையெல்லாம் இன்றைக்குக் கட்டி நாளைக்குச் சரிந்து போகும் வெற்றாரவார வீணடிப்புத் திட்டங்களே! முதலமைச்சருக் கேற்ற துறையமைச்சர்கள்! துறையமைச்சர்களுக்கேற்ற முதலமைச்சர்! கடந்த ஈராயிரம் மூவாயிரமாண்டுகளாக விழுந்து கிடக்கும் இத் தமிழினம் இந்தச் சாராய வருமானத்திலா தலைதூக்கப் போகிறது? இவர்கள் நடத்தும் பரிசுச்சீட்டுத் திட்டத்திலா, முட்டுக்கொடுத்து நிறுத்தப் பட்டுவிடப் போகிறது.?

வரலாற்றை யுணராத வாய்வீச்சுகள்! அறிஞர்களை மதிக்காத ஆராவாரப் பேச்சுகள்! வெறும் வாய்ப்புரளிக்காரர்களுக்கு வாய்க்கரிசி போட்டு, வீக்கத்தை ஆக்கம் என்றும் விழுந்தெழுவதை நடிப்பு என்றும், கெக்கலிப்பைக் கலையென்றும், கேடுகளை நலன்கள் என்றும் வெட்கங்கெட்ட விளம்பரங்களால் ஆட்சி வண்டி யோட்டிக் கொண்டிருக்கும், இவ் வாளுங்கட்சித் திராவிடங்களால், இவ்வேதுங்கெட்ட தமிழினத்திற்கு ஏதாவது உண்மையிலேயே முன்னேற்றம் ஏற்படுமா? அந்த மூகாம்பிகைக்கே வெளிச்சம்! மொழியின் அழிவைத் தடுக்கவும் அதனை வளர்த்தெடுக்கவும் வாய்ப்பை உருவாக்காத இவர்கள், அதனைச் சீர்திருத்தும் முயற்சிகளென ஏராளமான கோணல் மாணலான முயற்சிகளைச் செய்வதும், நான்காம் கழகம், ஆராய்ச்சிகள், அது இது என்றெல்லாம் வந்த வேகத்தில் உளறியவர்கள், நாளடைவில் அவற்றை மறந்துவிட்ட, அன்றாட அரசியல் ஆரவாரத்தில் ஊதியந்தேட முயல்வதும், இன முயற்சிக்கும் முன்னேற்றத்திற்குமென்று எதையும் அடியூன்றச் செய்யாமல், ஆரியத்திற்கும் வடநாட்டுப் பூரியத்திற்கும் அடிபணிந்து கிடப்பதும் கொடுமை கொடுமையிலும் கொடுமை!

இனி எதிர்க்கட்சி ஆளுங்கட்சி மூஞ்சி முகரைகள் இவ்வாறிருக்க இனங்காப்பதற்கென்றே எழுந்த இயக்கமாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் இயங்கத்தான். இத்தமிழினத்திற்கு ஏதாவது பயனுள்ள செயல்களைத் திட்டமிட்டுச் செய்கின்றதா எனில், ஐயகோ பெரியார் தொடங்கிய அப் பெரும்பயன் இயக்கமும் வெறுஞ் செயல்களிலும் வீணான விளம்பரங்களிலுமன்றோ தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தலை தடுமாறி பண வாணிக முதலாளி போல் வருவாயைப் பெருக்கிக் கொண்டு வறிதான முயற்சிகளில் ஈடுபட்டுக் கால அழிவு செய்து கொண்டு வருகிறது.

பகுத்தறிவு என்பதை இனமுயற்சியாக அவ் வியக்கம் அறிவிப்பதையும் 'கடவுள் இல்லை' என்பதை அதன் கொள்கையாகப் பரப்பவதையுமே அது செய்து கொண்டுள்ளது பெரிதும் வருந்தத்தக்கது. பகுத்தறிவு என்பது மாந்த இனத்திற்கே பொதுவான ஓர் அறிவு முயற்சி. தமிழின முன்னேற்றத்துக்கான தனி முயற்சியன்று அது. அது போலவே கடவுள் இல்லை என்பதும் அல்லது இருக்கின்றது என்பதும் ஓர் அறிவுக் கொள்கையாகவும் இருக்கலாம்; அல்லது மூட நம்பிக்கையாகவும் இருக்கலாம். அதற்கும் ஓர் இனத்தின் அடிமை நீக்கத்திற்கும், அல்லது உரிமை மீட்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. உலக உரிமை மீட்பு வரலாறுகளில் விடுதலை உணர்வுதான் செயல்பட்டு, அடிமைப்பட்ட இன முன்னேற்ற முயற்சிகளுக்குப் பயன்பட்டிருக்கின்றதே தவிர, பகுத்தறிவுணர்வோ இறைமறுப்புக் கொள்கையோ அல்ல. இக்காலும் உலகத் தேசிய இனங்கள் அத்தகைய கருத்துகளில் கவனம் செலுத்தாமல், உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களையும் கருத்துகளை மக்களிடையில் பரப்புவதையுமே தம் இன முன்னேற்ற முயற்சிகளாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இனி கடந்த காலத்தில் உருசியாவில் மார்க்சீயக் கொள்கையை முன் வைத்துப் பெரும் புரட்சிப் போராட்டங்களை நடத்தி, நாட்டை மீட்டுத் தேசிய இனமுன்னேற்றத்திற்கு அடிப்படையான பொதுவுடைமைச் சமநிலைக் குடியரசை அமைத்துக் கொடுத்த இலெனின், ஏங்கல்சு போன்ற மேதைகளும், பகுத்தறிவையோ, இறைமறுப்புக் கொள்கையையோ தங்களின் இன மீட்புக்கும் அரசியல் அதிகார மீட்புக்குமான உத்திகளாகப் பயன்படுத்தவில்லை.

மேலும், தமிழினத்தின் முன்னேற்றத்திற்கு, முற்ற முடிந்த முடியாகத் தமிழக விடுதலையே முதற் கொள்கையாகும். தமிழகம் விடுதலை பெற்றால்தான், தமிழினத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வாய்ப்பிருக்க முடியும். இவ் விடுதலை உணர்வை, இனவுணர்வாலேயே தட்டியெழுப்ப முடியும். இவ்வினவுணர்வையும், மொழியுணர்வாலேயே கட்டியமைக்க இயலும். வேறு நாடுகள் சிலவற்றில், ஒரே மொழி பேசும் மக்களே பிரிந்து கிடக்கின்றார்கள் என்பதும், அங்கெல்லாம் தாய்மொழியுணர்வு ஒற்றுமைக்குப் பயன்படவில்லையென்பதும், வேறு வேறு அடிப்படைகளைக் கொண்ட வேறு வேறு செய்திகள் ஆகும். அவற்றை யெண்ணி, இனவெழுச்சிக்கு மொழி பயன்படாதென்பது சரியான கொள்கையாகாது, தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் அதன் வழிப் பிரிந்த திராவிட மொழியினங்களைக் கூட தமிழ் மொழியாலும் அதன் வழிப்பட்ட பண்பாட்டாலும் நாம் ஒன்றுபடுத்திவிட முடியும்.

ஏறத்தாழ 142 தேசிய இனங்களைக் கொண்ட உருசியாவிலும் 50 தேசிய இனங்களைக் கொண்ட சீனாவிலும், உருசிய மொழியையும் சீன மொழியையும் வைத்தே, அந்நாட்டு மக்களை ஒன்றுபடுத்தியிருக்கிறார்கள் என்பதையும், இந்தியாவிலும் ஏறத்தாழ 1700 மொழிகள் பேசப் பெறுகின்றன. என்பதையும், இந்தியத் தேசிய மொழிகள் 14 இலும் கூட, 380 வகையான தாய்மொழிகள் உள்ளடங்குகின்றன என்பதையும், இருப்பினும் இந்திமொழி ஒன்றையே இணைப்பு மொழியாகக் கொண்டு இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றார்கள் என்பதையும் நோக்குகிறபொழுது, மக்கள் இன ஒருமைப்பாட்டிற்கு மொழி எத்துணை முகாமையானது என்பது நன்கு விளங்கும். இம் முகாமையான மொழியுணர்வைத் தவிர்த்து விட்டுத் தமிழினத்தை வேறு எந்த உணர்வாலும் ஒன்றுபடுத்திவிட முடியாதென்பது, நம் அசைக்க முடியாத கொள்கை. தொழிலாளர், உழவர்களைத் தட்டியெழுப்பி, ஒரு பொருளியல் போராட்டத்தையோ புரட்சியையோ உருவாக்குவதென்றாலும் கூட, நம் தாய்மொழி உணர்வைக் கொண்டே அதைச் செய்ய இயலும்.

இவ் வடிப்படையில், எவ்வாறாகப் பார்ப்பினும், தமிழின உரிமைகளை மீட்காமல், நம் நாட்டைஅரசியல், பொருளியல், குமுகாயவியல் அடிப்படையில் விடுதலை பெறச் செய்யாமல், எந்தவகையிலும் தமிழின முன்னேற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். அதற்கிடையில் நாம் செய்யும் எந்த முயற்சிக்கும் அதுவே அடிப்படையாக அமைய வேண்டுவது மிகமிக இன்றியமையாதது.

- தென்மொழி : சுவடி :21, ஓலை 9, 1985