வேண்டும் விடுதலை/தமிழக விடுதலைக் கோரிக்கையே தமிழிழத்தையும் வென்றெடுக்க வல்லது!

விக்கிமூலம் இலிருந்து

 
தமிழக விடுதலைக் கோரிக்கையே
தமிழிழத்தையும் வென்றெடுக்க வல்லது!


நாமெல்லாரும் எதிர்பார்க்கும் அல்லது நம்பியிருக்கும் அளவுக்குத் தமிழீழம் அவ்வளவு அண்மையில் கிடைக்குமாறு தெரியவில்லை. அதற்கு அடிப்படையான காரணங்கள் மூன்று, ஒன்று. தமிழ்ப் போராளிகளிடம் நாம் விரும்புகிற மன இணக்கம் இன்னும் ஏற்படவில்லை; எனவே ஒட்டு மொத்தமான, வலிவான ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு வாய்ப்பில்லாமலே இருக்கிறது. இரண்டு. கொடுமையும் கயமையும் நிறைந்த இலங்கை ஆட்சியினர் தம்மைப் பலவகையிலும் வலுப்படுத்திக் கொள்ள, அமைதிப் பேச்சுகள் என்னும் பெயரால் வழியமைத்துக் கொடுத்து விட்டது. மூன்று இந்திய அரசு தேன் தடவிய பேச்சாலும் நஞ்சு தடவிய நெஞ்சாலும் கரவாக நடந்து, இலங்கைக்கு மறைமுகமான ஆதரவும், நமக்கு வெளிப்படையான சொல்லளவு ஆறுதலும் தந்து கொண்டிருப்பதும், அதைத் தமிழீழப் போராட்ட இயக்கங்களுள் சில நம்பிக்கொண்டு கிடப்பதும்.

இம்மூன்று காரணங்களாலும் தமிழீழப் போராட்டத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டிருந்தாலும், அதன் நம்பிக்கையில் இன்னும் நமக்கு ஒரு சிறு தொய்வோ நெகிழ்வோ ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்படவும் வாய்ப்பில்லை. நாம் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சொல்லி வருவது போல் இங்குள்ள பொருள் வலிமையுடைய தமிழின இயக்கங்கள், தமிழீழப் போராளிகளுக்கு ஒரு கணிசமான தொகையைக் கருவிகள் வாங்க, ஒப்பந்ததத்தின் பெயரிலாகிலும் கொடுத்திருக்கலாம். அந்த ஒப்பந்தமும், நம் உதவியால், அவர்கள் தமிழீழம் பெற்றால், நம் நாட்டு விடுதலைக்கு அவர்கள் உதவ வேண்டும் என்பதாகவும் இருந்திருக்கலாம். இந்த நிலைகளை யெல்லாம் நாம் இவ்வளவு வெளிப்படையாகப் பேசவேண்டிய தேவை ஏன் வந்தது என்றால், கமுக்கமாகப் பேசிக்கொள்ள நம் ஒருவருள்ளும் மனவொற்றுமையோ, நம்பிக்கையோ இன்னும் ஏற்படவில்லை என்பதால்தான்.

ஆனால், நம் கருத்துப்படி அல்லது ஆசைப்படி நடைபெறாமற் போனதற்குக் காரணம் இங்குள்ள தமிழின நலம் நாடும் கட்சிகள் அல்லது நாடுவதாகக் கூறிக்கொண்டுள்ள பணத்தால் வலிவுள்ள இயக்கங்கள், மனத்தால் மெலிவுள்ள அல்லது நலிவுள்ளவையாக இருப்பதுதான். நாம் (நம்மைப் பொறுத்தவரையில் ஒரு வகையிலும் வலிவான இயக்கமாக இன்னும் வளர முடியவில்லையே அதுவும் ஒரு காரணத்தான் - என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வலிவிருந்தால் நாம் அவ்வாறு நடந்திருப்போமா என்பதைக் காலந்தான் உணர்த்திக் காட்ட முடியும்) ஆனால், இப்பொழுதுள்ள நிலையில் இதையெல்லாம் பேசி, நடக்கப் போவது ஒன்றுமில்லை. ஓர் ஆற்றாமைக்காகத்தான் இதைக் கூற வேண்டி உள்ளது. இது நிற்க.

இனி, இக்கட்டுரைத் தொடக்கத்தில், தமிழீழத் தொய்வுத் தொடர்பாகக் கூறிய மூன்று காரணங்களை இனிமேலாகிலும் நாம் தவிர்த்துக்கொள்ள இயலுமா என்பது பற்றிப் பார்க்க வேண்டும்.

இவற்றுள்இத் தொய்வுக்கு முதல் காரணமாகக் கூறப் பெற்றது. தமிழீழப் பேராளிகளின் இயக்கங்களுக்குள்ள ஒற்றுமையின்மை. இந்நிலை, இந்த அளவில் மட்டுமே நின்றிருந்தாலும் தாழ்வில்லை. அதனால் ஒன்றும் அவ்வளவு பெரிய இழப்புகள் நேர்ந்துவிடப் போவதில்லை. ஆனால், ஒற்றுமையில்லாத தன்மையை விட, தங்களுக்குள் ஒன்றையொன்று அரித்துகொள்கின்ற தன்மை அதிகமாகிக் கொண்டே வருவதுதான், நம்மால் ஏற்றுக் கொள்ள இயலாததாகவும் மிகவும் உள்ளம் நைய வேண்டியதாகவும் உள்ளது. தமிழினத்தின் பலவாறான உள்முகத் தன்னழிவுகள் இவ்வின முன்னேற்றத்தையே பெரிதும் தடைப்படுத்தி வருகின்றன என்பதை நம் முற்கால இக்கால அரசியல் வரலாறுகள் தெளிவாக உணர்த்துகின்றன. ஆனாலும். நாம் இதிலிருந்து இன்னும் மீள முடியாதவர்களாகவே உள்ளது. நம்மைப் பெரிதும் அழிவுக்குள்ளாக்கி அடியோடு அழித்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.

வெறும் அரசியல் நிலைகளில், அஃதாவது பதவிப் போராட்டப் போட்டிகளில் இவை இருப்பது போலவே, விடுதலைப் போராட்ட முயற்சிகளிலும் இருப்பது, இவ்வினத்தை என்றுமே ஈடேற்றாது என்பதை நாம் ஒவ்வொருவரும் உறுதியாக நெஞ்சில் இருத்திக் கொள்ளவேண்டும். இங்கு இன்னொன்றையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். சில பொதுக்குற்றங்களை நம்மில் ஒருவர் நம் இனநலம் பற்றிக் குறிப்பிடுகையில், நாம் ஒவ்வொருவரும் அக் குற்றம் நம்மிடம் இல்லாதது போலவும் பிறரிடம் இருப்பது போலவுமே கருதிக் கொள்கிறோம். ஏனெனில் பொதுமாந்த மனவியல்பு அப்படி. ஆனால், நம் போல் உண்மையிலேயே பொது நலம் கருதுபவர்கள் அப்படிக் கருதிக் கொள்வது கூடாது. இங்கு உண்மையல்லாதவரும் உண்மையுள்ளவர் போல் நடிக்கின்றனர். உண்மையுள்ளவரும் உண்மையில்லாதவர் போல் பிறர் கருதுமாறு இயல்பாகவே நடக்கின்றனர். பெரும்பாலும் போலிகளுக்கே நடிக்க முடிகிறது. உண்மைகள் நடிக்க இயல்வதில்லை. எனவே நிலைகள் தடுமாறிப் போகின்றன. விளைவுகள் தலைமாறிப்போகின்றன.

நம் விடுதலைப் போராட்ட முயற்சிகளிலும் சில நிலைகள் இப்படித்தான் உள்ளன. ஆனாலும் எப்படியோ அம் முயற்சிகளை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பாராட்டவும், ஊக்கவுமே செய்கிறோம். என்றாலும், நம் பாராட்டும், ஆதரவும் ஊக்கமும் முழுவதும் பயன்படாத வகையிலும், அல்லது வீணாகிப் போகும் அளவிலும் அப்போராட்ட இயக்கங்கள் தங்களுக்குள்ளேயே பொருதிக்கொள்ளும் பொழுது நாம் என்ன செய்ய முடியும்?

நாம் அனைவரும் நமக்கென ஒருபொது எதிரி, வரலாற்றுப் பகைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறக்கவே கூடாது. அத்துடன் நமக்குள் பல வேறுபாடுகள் இருந்தாலும் சிறப்பான பொதுவான ஒரு நோக்கம் இருக்கின்றது. என்பதையும் நாம் மறந்துலிடவே கூடாது. ஆனால், இதை நாம் எங்கே செய்கிறோம்? நேர்மை பேசும், பொதுநலம் உண்மையாகக் கருதும் அனைவரும் பொழுதுதேனும் எண்ணிப் பார்க்கவே வேண்டும் இதுவரை (நம் மனச்சான்றின் பார்வையுடன் சொல்லுங்கள்) நாம் எண்ணிப்பார்த்தோமா? அல்லது இனியாவது எண்ணிப் பார்ப்போமா? எவ்வாறு எண்ணிப் பார்க்கின்ற அன்றுதான் நம் முயற்சிகள் வலுப்பெற முடியும். அதுவரை நம் அறிவுகள். இயக்கங்கள், முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீரே! பாலை நில நிலவே!

இனி, பேச்சு, பேச்சு என்று நாம் பேசுகின்ற கால இடைவெளிக்கு இடமே தரக்கூடாது. இந்தப் பேச்சால் முதலில் எதிரியின் தாக்குதல் குறைந்ததா? இல்லையே, மாறாக எதிரியின் கைகளையன்றோ வலுப்படுத்தி யுள்ளது. இவ் விணக்கப் பேச்சு என்னைறக்குத் திம்புவில் தொடங்கினதோ அன்றிலிருந்து இன்று வரை ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்னும் வகையில், நாளுக்கு நாள் மேலுக்கு மேல் சிங்கள வெறியரின் தாக்கங்களும் அழிவுகளும் அதிகமாகி உள்ளனவே தவிர, ஓர் எள்மூக்குத்துணையும் குறைய வில்லையே! இனியும் பேச்சு எதற்கு? இதைப் பேச்சு தொடங்கு முன்பிருந்தே சொல்லி வருகிறோம். இனியும் போராளிகள் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தப் பேச்சைத் தவிர்ப்பதால் சில விரும்பத்தகாத விளைவுகளை நாம் எதிர்நோக்க வேண்டியிருந்தாலும், அவற்றையும் நாம் வரவேற்கவே வேண்டும். சாகத் துணிந்தவனுக்கு கடல் நீர் முழங்கால் ஆழமன்றோ? ஒன்றால் நாம் அனைவருமே வாழ்ந்தாக வேண்டும்; அன்றால் நாம் அனைவருமே போராடிச் செத்தாக வேண்டும்! இதில் பேச்சென்ன மூச்சென்ன? இப்பொழுது மட்டும் வாழவா வாழ்கிறோம்? செத்துக்கொண்டுத் தானே உள்ளோம்! எனவே, இனியும் எதிரி வலுப்பட நாம் கால இடையீடு தருதல் கூடாது.

அடுத்து, இந்தியாவின் அணுகுமுறையே கரவானது; ஓரவஞ்சனையானது; நயன்மையில்லாது; நடுநிலையற்றது. நாம் இன்னும் அதை நம்பிக் கொண்டுதானே உள்ளோம். இது வரை இராசீவ் காந்தியின் வாயிலிருந்து இலங்கைப் பேயர்களைக் கண்டிக்கும் ஒரு சொல்லாகிலும் வெளியே வந்துள்ளதா? எவராவது சொல்லமுடியுமா? கண்டிக்கவே மனம் வராத அவர்களிடம், நன்மையான முடிவை எதிர்பார்க்க முடியுமா? ஆனால், ஏனோ, எப்படியோ தெரியவில்லை, இந்தியாவின், இராசீவ் காந்தியின் கரவான, நம்மை மெலிவுபடுத்தும் முயற்சிகளில் இன்னும் நம் போராளிகள் சிலர் நம்பிக்கை வைத்துள்ளனர். இதுநம் முயற்சிகளை எங்குக் கொண்டு போய் விடுமோ, தெரியவில்லை! அஃது அவர்களுக்கும், அந்த இராசீவ் காந்திக்குமே வெளிச்சம் நம் கருத்துகள் காலத்தால் பொய் போகாதவை என்பதை அந்தக் காலமேதான் உணர்த்த வேண்டும். அதுவன்றி, வேறு வகையாக, நாம் இதைவிட வெளிப்படையாக எப்படி உணர்த்துவது?

இனி, இறுதியாகவும் உறுதியாகவும் நாம் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்

தமிழீழம் கிடைத்துத்தான், தமிழ் நாட்டுக்கான முயற்சிகள் நடைபெற வேண்டும் என்பதாக இதுநாள் வரை, ஒருவகையாக நாம் நம்பியிருந்தோம். ஆனால் இன்றைய நிலையில், தமிழீழ முயற்சிகள் அவ்வளவு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. நம்பிக்கை இயல்பான நம் உள்ள ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பினும், தமிழீழப் போராளிகளின் செயல் முயற்சிகளும் நடைமுறைப் போக்குகளும் அந்நம்பிக்கையை உடைப்பதாகவே உள்ளது.

எனவே, தமிழ்நாட்டுக் கோரிக்கையை நாம் உடனடியாக எழுப்பியாக வேண்டும். அதை இங்குள்ள தமிழினக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வெளிப்படுத்தியாக வேண்டும். இதற்காக நாம் எந்த நிலையிலும், யாருடனும் ஒன்றிணைய இரு கைகளை நீட்டி அணியமாக உள்ளோம். இந்தக் கோரிக்கை தான் இந்திய அரசை உடனடியாகத் தமிழீழத் தீர்வை நோக்கி நடையிடச்செய்யும் உந்து வேகத்தைக் கொடுப்பதாக இருக்க முடியும்! தமிழ்நாட்டில் இப்படி யொரு கோரிக்கை, இலைமறை காயாக இருப்பது நடுவணரசுக்கும், இராசீவ் காந்திக்கும் தெரியும். இருப்பினும் அது, வெறும் குரல் கோரிக்கையாகத்தான் இருக்கிறது என்பதாலும், அதைக் கைவைத்துப் பெரிதுப்படுத்தக் கூடாது என்னும் தந்திர உத்தியாலும், இதுவரை, எந்தவகையான நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் முன்வராமல் இருக்கின்றனர். ஆனால், இங்குள்ள அனைத்து இனநலக் கட்சிகளும் ஓங்கி அக்கொள்கையை ஒரு பெரும் முழக்கமாக எழுப்பும் பொழுது, அவர்கள் கட்டாயம் அதைச் செவிமடுத்தே ஆகவேண்டும். அதன்பின் அவர்களின் செயற்பாடுகள் நடவடிக்கைகள் மிக வேகமாகத் தீவீரமடையும் என்றாலும், அத்தீவிரந்தான் தமிழீழ நெருப்பை நீரூற்றி அணைக்க ஓர் உந்து விசையை அவர்களுக்குத் தரும். இந்த அணுகு முறை பயனளிக்குமே தவிர, எவ்வகையாலும் பயனில்லாமல் போகாது என்பதை உறுதியாக எண்ணிக்கொள்ள வேண்டும். மேலும் இந்தக் கோரிக்கை இங்கிருந்து எழுப்பப் பெறுமாயின், உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களின், ஒட்டு மொத்தமான விடுதலைக் குரலும் அக்கோரிக்கை முழக்கத்துடன் ஒன்றிணையும் என்பதில் ஐயமே இல்லை.

ஆனால், இங்கிருக்கும், ஏனோ தானோ போக்குகளைக் கொண்ட இயக்கங்கள் எண்ணிப் பார்க்க வேண்டுமே! அஃது என்று நடக்குமோ? பொறுத்திருந்துதான் சொல்ல் முடியும்!

- தென்மொழி, சுவடி : 21, ஓலை :11, 1985