வேண்டும் விடுதலை/நம் நெடுநாளையக் கனவான தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி அமைந்தது!

விக்கிமூலம் இலிருந்து

 
நம் நெடுநாளையக் கனவான தமிழக
மக்கள் விடுதலைக் கூட்டணி, அமைந்தது!


ப்பொழுதுள்ள இந்திய அரசியல், மற்றும் பொருளியல் குமுகாயச் சூழலில், தமிழ்நாடு தன்னிறைவு பெற முடியாதென்றும், முன்னேற்றம் அடைய முடியாதென்றும், கருதி, தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற அரசியல் சார்பற்ற முறையிலும், மக்கள் நலன் கருதியும் இயங்கிவரும் ஐந்து இயக்கங்கள் ஒன்றிணைந்து, தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி என்னும் ஓர் அமைப்பை அண்மையில் உருவாக்கியுள்ளன.

அவ்வியக்கங்களாவன: 1. உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், 2. பெரியார் சமஉரிமைக் கழகம், 3. அறிவியக்கப் பேரவை, 4. தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிய இலெனினிய), 5. தமிழக மாநிலக் குழு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.இலெ. நடுவண் சீரமைப்புக் குழு).

இந்த வலிவான அமைப்பு ஏற்பட்டதன் வழி, தந்தை பெரியார் அவர்களின் வலிந்த, தலையாய கொள்கையும், நம் நீண்ட நாளைய கனவும் நிறைவேறுகின்றன. இக் கூட்டணியின் ஒரே கொள்கையாகத் தமிழகத்தின் விடுதலை உறுதி செய்யப்பெற்று, அது வெளியிட்டுள்ள இயக்க அறிவிப்பு அறிக்கையில் அதன் கொள்கை கீழ்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

'அனைத்து வல்லரசுகளின் கொள்ளைகளைக் குழிதோண்டிப் புதைக்கவும், அரசு - தரகு முதலாளியத்தின் மற்றும் அதிகார வகுப்பின் கொட்டங்களை ஒழிக்கவும், சாதிய - நிலக்கிழமை அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டவும், உண்மையான மக்கள் குடியாட்சியை அமைத்திடவும், தமிழக மக்களின் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது இக் கூட்டணி.

'அவ்வகையில் இந்தியாவில் வாழும் பிற தேசிய இனங்களின் புரட்சி வழி விடுதலைக்குச் செயல் வடிவமும் ஆதரவும் அக் கூட்டணி நல்கிடும். மற்றும் உலகில் போராடும் அனைத்து மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கும் 'தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி' பக்கத் துணையாக நிற்கும்.

கூட்டணி வெளியிட்டுள்ள விரிவான நான்கு பக்கமுள்ள இயக்க அமைப்பின் அறிவிப்பு அறிக்கையில், இவ்வியக்கம் எதற்காகத் தோற்றுவிக்கப் பெற்றது என்பதற்குப் பலவாறான மிக விளக்கமான காரணங்கள் தெளிவாகக் கூறப்பெற்றுள்ளன.

இப்பொழுதைய நிலையில் இந்தியா ஒரு சிறைக் கூடமாக உள்ளதென்றும், தமிழகத்தின் சிற்றூர்ப்புறங்கள் வல்லரசுகளின்; பெரும் நிலக்கிழார்களின் வேட்டைக்காடாக எவ்வாறு ஆக்கப்பட்டுள்ளனவென்றும், தமிழக மக்களின் வேலைவாய்ப்பைப் பெருக்கவும், முறையான வேளாண்மையை வளர்க்கவும், குடியிருப்பு, உடை, உடல்நலம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு அடையவும், இங்குள்ள வளங்கள் அனைத்தையும் பெருக்கிடும் வகையிலும், தொழில் திட்டங்கள் அமையாமல், எவ்வாறு அவை வல்லரசு மற்றும் முதலாளிய நாடுகளுக்கும், இந்தியப் பெரும் தரகு முதலாளியக் கும்பலுக்கும், அதிகார வகுப்பிற்கும், பெரும் நிலவுடைமையாளர்களுக்கும் கொள்ளையடிப்பதற்கே வழி வகையாக உள்ளன என்றும், இக்கால் இந்தியா கடைப்பிடிக்கும் வாணிகக் கொள்கை, எப்படி இந்தாட்டை வல்லரசுகளிடம் அடகுவைத்துள்ளது என்றும், இங்குள்ள கெடுக்கும் கல்விமுறை; எப்படி, இங்குள்ள ஏழை மக்களிடம் தாழ்வுணர்ச்சியையும், இயலாமையையும், அடிமைத் தனத்தையும் வளர்த்து வருவதுடன், மேட்டுக்குடியினரிடையே ஒட்டுண்ணித்தனத்தையும் நாட்டு நலனற்ற தந்நலத்தையும், கோழைத்தனத்தையும் வளர்ப்பதற்கே அமைக்கப்பட்டிருக்கின்றது என்றும், மற்றும், இங்குள்ள மொழியடிமைத்தனம், சாதிக் கொடுமை, சீரழிந்து வரும் மக்கள் நலம், பண்பாட்டுச் சீரழிவுகள் – முதலியவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி அவை எப்படித் தீர்க்கப்பட வேண்டும் என்றும், அறிக்கை விரிவாகவும் விளக்கமாகவும் விளத்தப்படுத்துகிறது.

இன்றுள்ள தமிழக அரசு, எத்துறையிலும், தற்சார்பின்றித் தில்லியிலுள்ள நடுவண் அரசிற்கும் அதன்வழி பல்வேறு வல்லரசு நாடுகளுக்கும், தலைகுனிந்து, எடுபிடி அரசாகவே செயல்பட்டு வருவதையும்; இங்குள்ள அரசியல் கட்சிகளும், தங்களுக்கென்று தாங்கள் தொடக்கத்தில் அறிவித்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல்முறைகளையும், அவற்றுக்கான நயன்மையான மக்கள் போராட்டங்களையும் வழிநடத்த முடியாமல் மறந்தும், துறந்தும் பெருநலந் துய்க்கின்ற வாழ்க்கையிலேயே மிதந்து, இலக்கக் கணக்கில் செலவு செய்து, கோடிக் கணக்கில் பணம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய ஆளும் கும்பலுக்கு ஏவலாட்களாக, நேரத்திற்கு ஒரு கட்சி, நிமையத்திற்கு ஒரு கொள்கை என்று பச்சோந்தித்தனமாகச் செயல்பட்டு வருவதையும் இவ்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இறுதியில், முற்ற முடிந்த முடிபாக, மேற்குறிப்பிட்ட இழிநிலைகளையெல்லாம் ஒழித்துத் தமிழக மக்களுக்கு உண்மையான – வளமான வாழ்வை உறுதிப்படுத்திட வேண்டுமெனில், அனைத்து வல்லரசு நாடுகளின் வல்லாளுமைகளை எதிர்ப்பதும், பன்னாட்டு மூலமுதலீடுகளையும், இந்தியப் பெரு முதலாளிகளின் மற்றும் தமிழகத் தரகு முதலாளிகளின் மூலமுதலீடுகளையும் பறிமுதல் செய்து, உழைக்கும் மக்களின் உடைமையாக்குதல் வேண்டும் என்பதையும், பெரும் நிலக்கிழார்களின், கோயில் மடங்களின் நிலங்கள், உடைமைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, கடைநிலைக் குத்தகைக்காரர்களுக்கும், கூலி உழவர்களுக்கும் உடைமையாக்கிடல் வேண்டும் என்பதையும், மக்களுக்கு நன்மை பயக்கும் உண்மையான மக்கள் சமநிலைக் குடியாட்சியை அமைத்துத் தருவதன் மூலம் மட்டுமே இவை அனைத்தையும் செய்திட இயலும் என்பதையும், இன்றைய அரசியல் சிறைக்கூடத்தில் அல்லலுற்றுக் கிடக்கும் நிலையில், மக்களுக்கு நன்மை பயக்கும் இந்த அடிப்படையான பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டி, இச்சிக்கல்களையெல்லாம் தீர்ப்பதற்குத் தமிழக மக்கள் விடுதலை என்பதே ஒரு கட்டாயக் கடமையாக இருக்கிறது என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

எனவே, இக் கூட்டணி எடுத்துக் கொண்ட மிக மிகக் கடுமையானதும் மிகவும் சுமையானதுமாகிய இக் குறிக்கோள்களுக்குச் செயல் வடிவம் நல்கிட தமிழகத்து இளைஞர்களையும், தொழிலாளர்களையும், உழவர்களையும், பிற அனைத்துத் தரப்பு மக்களையும், தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி அறைகூவி அழைக்கிறது! வாழ்க கூட்டணி! வளர்க புரட்சி! வெல்க மக்களியக்கம்! விடுதலை பெறுக தனித்தமிழ்நாடு!

— தமிழ்நிலம், இதழ் எண். 49, திசம்பர், 1984