வேண்டும் விடுதலை/வெறும் கருத்தரங்குகளால் இதுவரை

விக்கிமூலம் இலிருந்து

 
வெறும் கருத்தரங்குகளால் இதுவரை
எந்தப் பயனும் விளைந்ததில்லை.

• தமிழன் வடநாட்டானுக்கு அடிமையாயிருக்கும் வரை, அவன் நம் கருத்துகளையும், நம் உரிமைகளையும் காதுகளிலேயே போட்டுக்கொள்ளமாட்டான்.

• திண்னையிலே இடம் கேட்டு உட்கார்ந்தவன் வீட்டையே தனக்குச் சொந்தம் என்பதா?

• பாவாணர் போன்ற அறிஞர்கள் வேண்டுமானால் கருத்தரங்கை நம்பியிருக்கட்டும். இளைஞர்கள் போராடித்தான் உரிமைகளைப் பெற முடியும்.

• நிலை இப்படியே போனால் தமிழன் என்றொருவன் இருக்கின்றானா என்று கேட்கப்படுகின்ற நிலை வந்தாலும் வரும். எனவே இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமானால் தமிழகத்தை வடநாட்டான் ஆளுகையினின்று பிரித்தே ஆக வேண்டும்.

• தஞ்சைக் கருத்தரங்கில் பெருஞ்சித்திரனார் முழக்கம்!

தஞ்சையில் (உலகத் தமிழ்க் கழக ஏற்பாட்டில் கடந்த சிலை ௧௭ (31- 12, 72) அன்று நடந்த தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கில் பெரும்புலவர் நீ. கந்தசாமியார் அவர்களின் தலைமையில் தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திரனார் ஆற்றிய சொற்பொழிவு:

பேரன்புக்கும் பெருமதிப்பிற்குரிய தலைவர் அவர்களே! வணக்கத்திற்குரிய பாவாணர் அவர்களே! அறிவியல் முனைவர் கோ. து. அவர்களே! மற்றும் இங்குக் கூடியிருக்கும் பேராசிரியப் பெருமக்களே! புலவர் பெருமக்களே! தமிழன்பர்களே! தாய்மார்களே! உங்கள் அனைவர்க்கும் என் பணிவான வணக்கம்.

இந்த மாநாடு தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கு என்ற பெயரிலே கூடியிருக்கின்றது. இது மிகவும் தேவையான ஒரு மாநாடாக இருந்தாலும் கூட, இந்த மாநாட்டு நடைமுறைகளும் இதனுடைய முடிவான கருத்து அறிவிப்பும் பெரிதும் வருத்தத்திற்குரிய செய்தியாக எனக்குப் படுகின்றது. ஏனென்றால் கடந்த காலத்திலெல்லாம். யாரையோ ஒருவனைப் பார்த்து அவன் எங்கிருந்தோ வந்தவன் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் நாம். ஏதோ மழைக்காக இருளுக்காக அஞ்சி, நம்முடைய திண்ணையிலே வெளிப்புறத்திலே வந்து ஒன்ற வந்தவன் போலிருந்து அத்திண்ணையிலே கொஞ்சம் இடம் கேட்டு உட்கார்ந்து கொண்டு இப்பொழுது, வீட்டிலுள்ள நம்மைப் பார்த்து, “இந்த வீடு எனக்குச் சொந்தமா? உனக்குச் சொந்தமா? உனக்குச் சொந்தமில்லை, நீ வெளியிலே வா ஒரு வேளை நான் இதற்குச் சொற்தமாக இருப்பேன் த என்று சொல்லக்கூடிய அளவிலே,” சொல்லுகிறது போலவும் நாம் இல்லை, எங்களுக்குத்தான் சொந்தம்” என்று தருக்கமிட்டுக் கொண்டு இருப்பது போலவும் ஆகிய ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. இம் மாநாடு.

“தமிழ் தன்னுடைய நிலையிலே வளர வேண்டும், அதற்குரிய பெருமையைப் பெற வேண்டும்” என்று போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே "தமிழ் எங்குப் பிறந்தது? தமிழன் எங்குப் பிறந்தான்?” என்று ஆய்கின்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறோம். தமிழனுடைய பிறந்தகம் இதுதான் என்பதிலே ஒரு சிறிதும் ஐயமில்லாமல் இருந்த அந்த நிலைபோய், இப்பொழுது ‘தமிழனும் வேறு எங்கோ இருந்து இங்கு வந்தவன்’ என்று சொல்லக் கூடிய ஒரு கருத்தும் அப்படியில்லை: இங்குதான் இருந்தான்; இதுதான் அவனுடைய பிறந்தகம்” என்று நாம் எதிர்த்துச் சொல்லக் கூடிய ஒரு நிலையும் நமக்கு உண்டாகியிருப்பது, மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு செய்தி.

தமிழனுடைய பிறந்தகம் எது? அதைத் தீர்மானிக்க வேண்டியவர் யார்? என்கின்ற நிலையெல்லாம். இப்பொழுது இல்லை. தமிழன் இப்பொழுதிருக்கின்ற இந்த நிலையைக்கூட வலுப்படுத்திக் கொள்வானா என்று வருந்திக் கொண்டிருக்கிற இந்த நேரத்திலே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த செய்தியைப் பற்றிப் போரிட்டுக் கொண்டிருப்பவர்களாக நாம் இருகின்றோம். இனி, தமிழன் என்று ஓர் இனம் இருக்கின்றதா என்று ஐயப்பட்டு அதை நிலை நாட்டுகின்ற ஒரு கருத்தரங்கு நடந்தாலும் நடக்கும். 'தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டமா’ என்கின்ற கருத்தரங்கு நடைபெறுகின்ற நிலை போய், தமிழன் என்று ஒருவன் இருக்கின்றானா என்று ஆய்வு நடத்தக்கூடிய நிலைக்கே நாம் வந்தாலும் வருவோம். இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக எண்ணிப் பார்க்கின்ற பொழுது, தமிழன் தன்னுடைய பெருமையை மறந்துவிட்டு எவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றான். என்று கருதி வருந்த வேண்டியுள்ளது.

இது தொடர்பாகக் காலையிலிருந்து மாலையில் பேசிய கருத்துரைகள் முடிய, அருமையான விளக்கங்களை இவற்றை விட வேறு விளக்கங்கள் தேவையே இல்லையென்று சொல்லுமளவிற்கு-அறிஞர்கள் பலரும் நமக்குத் தந்தார்கள். இருந்தாலும் கூட, இந்த விளக்கங்கள் பாவாணர் அவர்கள் நினைத்துக்கொண்டு இருப்பது போல, இனிமேல் உலக முழுவதும் ஏற்றுக் கொள்ளும் முடிவான விளக்கங்கள் என்று கொள்வதற்கில்லை. இன்னும் பல நூல்கள் நாளுக்குநாள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இன்னும் பல கருத்துகளை நாள்தோறும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட கருத்துகளையெல்லாம். அப்பொழுதைக்கப்பொழுது நாம் மறுத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற நிலை இருக்குமே தவிர, இந்தப் போராட்டத்திற்கு முடிவே இருக்காது. எனவேதான் இத்தகைய நிலைகளைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல் இருக்கும் படியான ஒரு நிலைக்கு நாம் வந்தாலொழிய வேறு எந்தப் பயனும் இவ்வகைக் கருத்தரங்குகளால் ஏற்படவே போவதில்லை.

இனி, பாவாணர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கின்றேன். இந்தக் கருத்துகளை இனி ஒரு கருத்தரங்கப் போராட்டமாக நடத்திக் கொண்டிருக்க வேண்டுவதில்லை. இந்தக் கருத்துப் போராட்டம் வேண்டுமானால் அறிஞர்கள் அளவிலே நிகழ்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால் நம்மைப் போன்ற இளைஞர்கள் நமக்கு இருக்க வேண்டிய உரிமைகளை நாமே பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். . இளைஞர்களும் சேர்ந்து வாயளவிலே, அல்லது நூலளவில் இத்தகைய கருத்துகளுக்காகச் சொற் போராட்டங்கள் நிகழ்த்திக் கொண்டிருப்பது நம் ஆற்றல்களையும் காலத்தையும் வீணடிக்கின்ற செயலாகவே எனக்குப் படுகின்றது. எனவேதான் என்னுடைய நோக்கும், போக்கும் வேறு அளவிலே விரைவிலே இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் தமிழகத்தை எப்படியாகிலும் வடநாட்டார் ஆளுகையினின்று பிரித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு எந்த வகையான நன்மையும் ஏற்படப் போவதில்லை என்ற அளவிலே போய்க் கொண்டிருக்கின்றன. (பெருத்த கையொலி) மற்றபடி, இப்படிப்பட்ட கருத்துப் போராட்டங்களை நாம் நடத்தி நடத்தி, நம்முடைய கருத்துகளுக்கு நேர் எதிரிடையான கருத்துகள் வடநாடுகளிலும், வெளிநாடுகளிலும் எதிரிகளால் பரப்பட்டு வருகின்ற அந்த நிலைகளை நாம் தடுத்து நிறுத்திவிட முடியாது. நமக்குள்ள அடிப்படை உரிமைகளை மொழி, இனம், நாடு என்ற மூவகை நிலைகளிலும் நமக்குள்ள உரிமைகளை நாம் பெற்றாலொழிய, நாம் எத்தகைய மாநாடுகள் கூட்டி, எவ்வளவு வலிவான உண்மையான கருத்துகளைச் சான்றுடன் நிறுவினாலும் அவற்றிற்கு வெற்றிகிட்டப் போவதே இல்லை. இவற்றுக்குச் செயலளவில் நாம் ஒரு முடிவு கட்டியாக வேண்டும். இது தான் என்னுடைய முடிவான கருத்து. பாவாணர் அவர்கள் பேசச் சொன்னதற்காக இதையும் இங்குச் சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.

மற்றபடி, தமிழனுடைய பிறந்தகம் குமரிக் கண்டந்தான் என்று அவனுக்குப் பன்னிப் பன்னிச் சொன்னாலும், அவன் ஆளுகையில் நாம் உள்ளவரை, மாறான அதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. இக் கருத்துக்கு வலிவான சான்றுகளைப் பாவாணர் அவர்கள் தம் நூல்கள் எல்லாவற்றிலும் பல இடங்களிலும் காட்டியிருக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் அவற்றையே சொல்லிக் கொண்டிருப்பதில் நமக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே இந்த வகையில் கருத்துப் போராட்டத்தைவிடக் கைப் போராட்டமே நாம் செய்ய வேண்டுவது என்று கூறி முடித்துக் கொள்கின்றேன் வணக்கம்.

- தென்மொழி, சுவடி :11, ஓலை 4, 5, 1974