பெருங்கதை/3 14 நலன் ஆராய்ச்சி

விக்கிமூலம் இலிருந்து
(3 14 நலன் ஆராய்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

3 14 நலனாராய்ச்சி

உதயணன் நிலை[தொகு]

மதலை மாடத்து மடமொழி மாதரொ
டுதயண குமர னொடுங்கிய வுவகையன்
விண்ணுறை தேவரும் விழையும் போகத்துப்
பெண்ணுறை யுலகம் பெற்றோன் போலவும்
நோக்கருங் கதிரவ னீக்கம் பார்த்துப் 5
பைங்கதிர் விரிக்கும் பனிமதிக் கிழவன்
அங்கண் ஞாலத் தளவை யாகிய
பன்னாட் பக்கஞ் செல்லாது சின்னாள்
வெண்முக நிலாவொளி சுருங்க மெல்லென
உண்மகி ழுரோணியொ டொளித்தது போலவும் 10
திகழ்மணி மார்ப னகநக ரொடுங்கப்
பொருள்புரி யமைச்சர் புறநகர் கரப்புழி
இருளறு நுண்மதித் தோழியை யெழுதெனக்

தோழி எழுதித்தந்த அரண்மனைவடிவ முதலியவற்றைக் கண்டு உதயணன் நினைத்தல்[தொகு]

கோயில் வட்டமுங் கோணப் புரிசையும்
வாயின் மாடமும் வஞ்சப் பூமியும் 15
இலவந் திகையு மிளமரக் காவும்
கலவம் புகலுங் கான்கெழு சோலையும்
உரிமைப் பள்ளியு மருமைக் காப்பிற்
படைக்கலக் கொட்டிலும் புடைக்கொட் டாரமும்
நடைப்பெரு வாயிலு முடைக்குறும் புழையும் 20
அவைமண் டபமு மாடம் பலமும்
வகைமாண் டெய்வம் வழிபடு தானமும்
குதிரைப் பந்தியு மதிர்த லானா
யானைத் தானமுந் தானைச் சேக்கையும்
எயில தகற்றமு மயில்விளை யாடும் 25
சுதைவெண் குன்றமும் புதையிருட் டானமும்
உடையன வெல்லா முள்வழி யுணர்ந்து
தெளிதல் செல்லாத் தெவ்வ னிவனெனின்
அளியியற் செங்கோ லரசுமுதல் வவ்வலும்
எளிதெனக் கென்னு மெண்ணின னாகிப் 30
பெண்பாற் சூழ்ச்சியிற் பிழைப்புப் பலவெனும்
நுண்பா னூல்வழி நன்கன நாடின்
ஏத மில்லை யிதுவெனத் தேறி
மாதர் மாட்டு மகிழ்ச்சியொடு தெளிதல்
நீதி யன்றென நெஞ்சத் தடக்கிச் 35
செருக்கிய னெடுங்கண் செவ்வி பெற்றாங்
குரத்தகை யண்ண லுறைவது வலிப்பத்

பதுமாபதி செவ்வி அரியளாதல்[தொகு]

தவ்வை யாயினுந் தாயே யாயினும்
செவ்வி யறியார் சென்றுமெய் சாரிற்
காட்டக் காணாள் கதம்பா டேற்றி 40
வாட்கட் பாவை மருவற் கின்னாக்
காட்சிய ளாகிக் கருதுவ தெதுவெனின்
வீயா நண்பின் வேத மகளுழை
யாழும் பாட்டு மவைதுறை போகக்
கற்றல் வேண்டு மினியெனக் கற்பதற் 45
கன்புடை யருண்மொழி யடைந்தோ ருவப்ப
நன்பல பயிற்றிய நாவின ளாகி
அமிழ்தி னன்ன வறுசுவை யடிசிலும்
இவணே வருக வின்று முதலெனத்
தமர்வயி னேய தன்மைய ளாகி 50
மழையயா வுயிர்க்கும் வான்றோய் சென்னி
இழையணி யெழுநிலை மாடத் துயரறை

கட்டில்[தொகு]

வாள்வரி வயமான் மூரி நிமிர்வின்
நிலைக்கா லமைந்த நிழறிகழ் திருமணி
கயிற்குரல் வளைஇய கழுத்திற் கவ்விய 55
பவழ விழிகைப் பத்திக் கட்டத்துப்
பட்டுநிணர் விசித்த கட்டமை கட்டிலுட்
பொழுதிற் கொத்த தொழில வாகி
எழுதுவினைப் பொலிந்த விழுதுறழ் மென்மைய
முறைமையி னடுத்த குறைவில் கோலமொடு 60
நிரப்ப மெய்திய நேர்பூம் பொங்கணைப்
பரப்பிற் கொத்த பாய்காற் பிணைஇ
அரக்குவினைக் கம்மத் தணிநிலைத் திரள்காழ்
ஒத்த வூசி குத்துமுறை கோத்த
பவழ மாலையும் பன்மணித் தாமமும் 65
திகழ்கதிர் முத்தின் றெரிநலக் கோவையும்
வாய்முத றோறுந் தான்முத லணிந்த
அந்தண் மாலையு மகடுதோ றணவரப்
பைம்பொற் புளகம் பரந்துகதி ரிமைப்ப
ஐவே றுருவின் மெய்பெறப் புனைந்த 70
பொய்வகைப் பூவும் வையெயிற் றகல்வாய்
மகரத் தங்கண் வகைபெறப் போழ்ந்த
காம வல்லியுங் களிறும் பிடியும்
தேமொழிச் செவ்வாய்த் திருமகள் விரும்பும்
அன்ன வீணையு மரிமா னேறும் 75
பன்மரக் காவும் பாவையும் பந்தியும்
பறவையும் பிறவு முறநிமிர்ந் தோவா
நுண்ணவாப் பொலிந்த கண்ணவா வுறூஉம்
மீமிசைக் கட்டின் வாய்முதற் றாழ்ந்த
வண்ணப் படாஅங் கண்ணுறக் கூட்டிப் 80

பாக்குவகை முதலியன[தொகு]

பைங்கருங் காலிச் செங்களி யளைஇ
நன்பகற் கமைந்த வந்துவர்க் காயும்
இருங்கண் மாலைக்குப் பெரும்பழுக் காயும்
வைகறைக் கமையக் கைபுனைந் தியற்றிய
இன்றே னளைஇய விளம்பசுங் காயும் 85
பைந்தளி ரடுக்கும் பலமுத லாகிய
மன்பெரு வாசமொடு நன்பல வடக்கிய
பயில்வினை யடப்பையொடு படியகந் திருத்தி
உருவொடு புணர்ந்த வுயரணை மீமிசை
இருபுடை மருங்கினு மெழில்பட விரீஇ 90
ஏமச் செவ்வி யேஎர் நுகரும்
யாமத் தெல்லையுண் மாமறைப் பேரறை
உலாவு முற்றத் தூழ்சென் றாட
நிலாவிரி கதிர்மணி நின்று விளக்கலும்
பள்ளி தன்னுள் வள்ளிதழ்ப் போதையொடு 95
மன்னய முரைத்து நன்னலங் கவர்ந்து

உதயணன் சித்திரத்தைக் கண்டு வியத்தல்[தொகு]

வித்தக ரெழுதிய சித்திரக் கொடியின்
மொய்த்தலர் தாரோன் வைத்துநனி நோக்கிக்
கொடியின் வகையுங் கொடுந்தாண் மறியும்
வடிவமை பார்வை வகுத்த வண்ணமும் 100
திருத்தகை யண்ணல் விரித்துநன் குணர்தலின்
மெய்பெறு விசேடம் வியந்தன னிருப்பக்

பதுமாபதி ஊடல்[தொகு]

கைவளர் மாதர் கனன்றுகனன் றெழுதரும்
காம வேகந் தான்மிகப் பெருகப்
புலவி நெஞ்சமொடு கலவியுட் கலங்கிப் 105
புல்லுகை நெகிழப் புணர்வுநனி வேண்டாள்
மல்லிகைக் கோதை மறித்தன ளிருந்து
சூட்டுமுகந் திருத்தி வேட்டுநறு நீரின்
மயிரு மிறகுஞ் செயிரறக் கழீஇக்
கோனெய் பூசித் தூய்மையு ணிறீஇப் 110
பாலுஞ் சோறும் வாலிதி னூட்டினும்
குப்பை கிளைப்பறாக் கோழி போல்வர்
மக்க ளென்று மதியோ ருரைத்ததைக்
கண்ணிற் கண்டே னென்று கைநெரித்
தொண்ணுதன் மாத ருருகெழு சினத்தள் 115
தம்மால் வந்த தாங்கரும் வெந்நோய்
தம்மை நோவ தல்லது பிறரை
என்னது நோவ லேத முடைத்தெனக்
கருங்கே ழுண்கண் கயலெனப் பிறழ்ந்து
பெருங்கயத் தாமரைப் பெற்றிய வாகத் 120
திருநுதல் வியர்ப்பெழுந் திருநிலத் திழிதர
நிலாவுறு திருமுக நிரந்துடன் மழுங்கிக்
கருமயி ரிவர்ந்து காண்டகக் குலாஅய்ப்
புருவம் பலகால் புடைபுடை பெயர
முத்துற ழாலி தத்துவன தவழ்ந்து 125
பொன்னிறக் குரும்பை தன்னிற மழுங்கத்
தன்னிறங் கரப்பத் தவாஅ வெம்மையொடு
வீழனல் கடுப்ப வெய்துயிர்த் தலைஇக்
காதல்செய் கலங்கள் போதொடு போக்கி
அந்தண் சாந்த மாகத்துத் திமிர்ந்து 130
பண்புரை கிளவி பையெனத் திரியக்

உதயணன் பதுமாபதியின் ஊடலைத் தீர்த்தல்[தொகு]

மரும்பேர் கிளவி கதிர்முகை முறுவற்
பெருந்தடங் கண்ணி பிழைப்பொன் றுணரேன்
வருந்தல் வேண்டா வாழிய நங்கையென்
றிரந்தன னாகி யேற்பக் காட்டிய 135
இலம்புடை நறுமல ரெழுதுகொடிக் கம்மத்துச்
சிலம்பிடைத் தங்கிய சேவடி யரத்தம்
காரிருங் குஞ்சி கவினபெறத் திவள
அரவுவாய்க் கிடப்பினு மலர்கதிர்த் தண்மதிக்
குருவுக்கதிர் வெப்ப மொன்று மில்லை 140
சிறியோர் செய்த சிறுமையுண் டெனினும்
தரியாது விடாஅர் தாநனி பெரியோர்
எனபது சொல்லி யெழில்வரை மார்பன்
பொன்புனை பாவை புறக்குடை நீவிச்
செங்கையிற் றிருத்திப் பைந்தோ டணிந்து 145
கலம்பல திருத்தி நலம்பா ராட்டிச்
சாந்த மெழுகிச் சாயநெகிழ் பறிந்து
பூம்புறங் கவவப் புனைதா ரோதி
பூண்ட பூணொடு பொறையொன் றாற்றேன்
தீண்டன்மின் பெருமவெனத் தீரிய வுரைத்து 150

பதுமாபதி ஊடல் தீர்தல்[தொகு]

மாடத் தகத்தி லாடுவினைக் காவினுட்
கொம்பர் மீமிசைக் கூகைவந் துலாஅய்
வித்தகக் கைவினைச் சத்தி யேறி
உட்குத்தக வுரைத்தலுங் கட்கின் பாவை
நெஞ்சந் துட்கென நெடுவிடை நின்ற 155
காற்றெறி வாழையி னாற்ற நடுங்கி
அஞ்சி லோதி யாகத் தசைத்தர
அச்ச முயக்க நச்சுவனன் விரும்பி
மெல்லியன் மாதரொடு மேவன கிளந்து
புள்ளியுந் தளைத்தும் புணர்ந்தும் பொருந்தியும் 160
அல்குலு மாகமு மாற்றநலம் புகழ்ந்தும்
அமர ராக்கிய வமிழ்தெனக் கினையோள்
தன்முனை யெயிற்றுநீர் தானென வயின்றும்
ஒழுகா நின்ற காலை யொருநாள்

பதுமாபதி தோழிக்கச் சொல்லல்[தொகு]

இன்பப் பேரறை நன்பகற் பொருந்தி 165
அருமறை யறிதற் கமைந்த வார்வத்
தொருதுணைத் தோழியை யொன்றுவனள் கூவித்
திருவிற் கமைந்த தேந்தார் மார்பன்
உருவிற் கமைந்த வுணர்வுநன் குடைமை
அளத்து நாமெனத் துளக்கிலள் சூழ்ந்து 170
பலர்புகழ் மார்பன் பயின்ற விச்சைகள்
வல்லவை யாய்கென வழிபா டாற்றி

தோழி வினாக்களும் உதயணன் விடைகளும்[தொகு]

நல்லவை யாவென நகைக்குறிப் பூர்தர
வினவிய மகளிர்க்குச் சினவுநர்ச் சாய்த்தவன்
வேத விழுப்பொரு ளோதின ருளரெனின் 175
எனைத்துங் கரவேன் காட்டுவென் யானென
எமக்கவை யென்செயு மிசையொடு சிவணிய
கருவிக் கரண மருவினை யோவென
நீத்தவர் வேண்டிய துப்புர வல்லால்
பார்ப்பன மக்கள் பரிந்துபிற பயிற்றார் 180
வேள்விக் குரிய கருவி யாவும்
வாளேர் கண்ணி வல்லேன் யானென
நல்லதொன் றுண்டெனிற் சொல்லலெங் குறையெனத்
தோளுறு துணைவிக்குத் துயரம் வந்தநாள்
சூளுறு கிளவியிற் றொழுதனள் கேட்ப 185
இடவரை யருவியி னிம்மென விசைக்கும்
குடமுழ வென்பது பயிற்றினென் யானென
அவைக்குரி விச்சை வல்ல வந்தணன்
கவைத்தொழின் மகனென நகைத்தொழி லாடி
அந்தர மருங்கி னமர ராயினும் 190
மந்திர மறப்ப மனநனி கலக்கும்
பைந்தொடி பயிற்றும் பண்யாழ் வருகெனத்
தந்துகைக் கொடுக்கலுந் தண்பூங் கொடிபோல்

பதுமாபதியின் செயல்[தொகு]

எதிர்முகம் வாங்கி யெழினி மறைஇப்
பதுமா நங்கையும் பையெனப் புகுந்து 195
கோன்மணி வீணை கொண்டிவ ணியக்கத்
தான மறிந்தி யாப்பி யாயினி
நீநனி பாடென நேரிழை யருளித்
துணைவன் முன்னதன் றொன்னலந் தோன்றக்
கணைபுணர் கண்ணி காட்டுதல் விரும்பி 200
ஒள்ளுறை நீக்கி யொளிபெறத் துடைத்து
வன்பிணித் திவவு வழிவயி னிறுத்த
மெல்விர னோவப் பல்கா லேற்றி
ஆற்றா ளாகி யரும்பெறற்றோழியைக்
கோற்றேன் கிளவி குறிப்பிற் காட்டக் 205

உதயணனும் யாப்பியாயினியும் உரையாடல்[தொகு]

கொண்டவள் சென்று வண்டலர் தாரோய்
வீணைக் கேற்ப விசையொடு மற்றிவை
தானத் திரீஇத் தந்தீ கெமக்கெனக்
குலத்தொடும் வாராக் கோறரும் விச்சை
நலத்தகு மடவோய் நாடினை யாகின் 210
அலைத்தல் கற்றல் குறித்தேன் யானென
மற்போர் மார்பவிது கற்கல் வேண்டா
வலியி னாவது வாழ்கநின் கண்ணி
தரித்தர லின்றிய விவற்றை யிவ்விடத்
திருத்த லல்லது வேண்டலம் யாமென 215
அன்ன தாயி னாமெனிற் காண்கம்
பொன்னிழை மாதர் தாவெனக் கொண்டு
திண்ணிய வாகத் திவவுநிலை நிறீஇப்
பண்ணறி வுறுத்தற்குப் பையெனத் தீண்டிச்
சுவைப்பட நின்றமை யறிந்தே பொருக்கெனப் 220
பகைநரம் பெறிந்து மிகையுறப் படூஉம்
எள்ளற் குறிப்பினை யுள்ளகத் தடக்கிக்
கோடும் பத்தலுஞ் சேடமை போர்வையும்
மருங்குலும் புறமுந் திருந்துதுறைத் திவவும்
விசித்திரக் கம்மமு மசிப்பில னாகி 225
எதிர்ச்சிக் கொவ்வா முதிர்ச்சித் தாகிப்
பொத்தகத் துடையதாய்ப் புனனின் றறுத்துச்
செத்த தாருச் செய்தது போலும்
இசைத்திற னின்னா தாகிய திதுவென
மனத்தி னெண்ணி மாசற நாடி 230
நீட்டக் கொள்ளாண் மீட்டவ ளிறைஞ்சிக்
கொண்ட வாறுமவன் கண்ட கருத்தும்
பற்றிய வுடனவ னெற்றிய வாறும்
அறியா தான்போன் மெல்ல மற்றதன்
உறுநரம் பெறீஇ யுணர்ந்த வண்ணமும் 235
செறிநரம் பிசைத்துச் சிதைத்த பெற்றியும்
மாழை நோக்கி மனத்தே மதித்தவன்
அகத்ததை யெல்லா முகத்தினி துணர்ந்து
புறத்தோ னன்மை திறப்படத் தெளிந்து
தாழிருங் கூந்தற் றோழியைச் சேர்ந்திவன் 240
யாழறி வித்தக ன்றிந்தரு ளென்றலின்
இன்னுஞ் சென்றவ னன்ன னாகுதல்
நன்னுத லமர்தர நாடிக் காண்கெனப்
பின்னுஞ் சேர்ந்து பெருந்தகை யெமக்கிது
பண்ணுமை நிறீஇயோர் பாணிக் கீதம் 245
பாடல் வேண்டுமென் றாடமைத் தோளி
மறுத்துங் குறைகொள மறத்தகை மார்பன்
என்கட் கிடந்த வெல்லா மற்றிவள்
தன்கண் மதியிற் றான்றெரிந் துணர்ந்தணள்
பெரிதிவட் கறிவெனத் தெருமந் திருந்திது 250
வல்லுந னல்லே னல்லோய் நானென
ஒருமனத் தன்ன வுற்றார்த் தேற்றா
அருவினை யில்லென வறிந்தோர் கூறிய
பெருமொழி மெய்யெனப் பிரியாக் காதலொ
டின்ப மயக்க மெய்திய வெம்மாட் 255
டன்புதுணை யாக யாதொன் றாயினும்
மறாஅ தருளென வுறாஅன் போல

மாலைக் காலம்[தொகு]

அலங்குகதிர் மண்டில மத்தஞ் சேரப்
புலம்புமுந் துறுத்த புன்கண் மாலைக்
கருவி வானங் கால்கிளர்ந் தெடுத்த 260
பருவம் பொய்யாப் பைங்கொடி முல்லை
வெண்போது கலந்த தண்கண் வாடை
பிரிவருங் காதற்குக் கரியா வதுபோல்
நுண்சா லேக நுழைந்துவந் தாட

உதயணன் பாடிக்கொண்டு யாழ் வாசித்தல்[தொகு]

ஆராக் காதலிற் பேரிசை கனியக் 265
குரலோர்த்துத் தொடுத்த குருசி றழீஇ
இசையோர் தேய வியக்கமும் பாட்டும்
நசைவித் தாக வேண்டுதிர் நயக்கெனக்
குன்றா வனப்பிற் கோட பதியினை
அன்றாண்டு நினைத்தஃ தகன்ற பின்னர் 270
நலத்தகு பேரியாழ் நரம்புதொட் டறியா
இலக்கணச் செவ்விர லேற்றியு மிழித்தும்
தலைக்கட் டாழ்வு மிடைக்க ணெகிழ்ச்சியும்
கடைக்கண் முடுக்குங் கலந்த கரணமும்
மிடறு நரம்பு மிடைதெரி வின்றிப் 275
பறவை நிழலிற் பிறர்பழித் தீயாச்
செவிச்சுவை யமிர்த மிசைத்தலின் மயங்கி

உதயணனுடைய இசையின் சிறப்பு[தொகு]

மாடக் கொடிமுடி மழலையம் புறவும்
ஆடமை பயிரு மன்னமுங் கிளியும்
பிறவு மின்னன பறவையும் பறவா 280
ஆடுசிற கொடுக்கி மாடஞ் சோரக்
கொய்மலர்க் காவிற் குறிஞ்சி முதலாப்
பன்மர மெல்லாம் பணிந்தன குரங்க
மைம்மலர்க் கண்ணியு மகிழ்ந்து மெய்ம்மறப்ப

பதுமாபதி வியத்தல் முதலியன[தொகு]

ஏனோர்க் கிசைப்பி னேதந் தருமென 285
மானேர் நோக்கி மனத்திற் கொண்டு
கண்கவர் வுறூஉங் காமனிற் பின்னைத்
தும்புரு வாகுமித் துறைமுறை பயின்றோன்
இவனிற் பின்னை நயனுணர் கேள்வி
வகையமை நறுந்தார் வத்தவர் பெருமகன் 290
உதையணன் வல்லனென் றுரைப்ப வவனினும்
மிகநனி வல்லனித் தகைமலி மார்பனென்
றுள்ளங் கொள்ளா வுவகைய ளாகி
ஒள்ளிழை தோழியோ டுதயணற் பேணிக்
கழிபெருங் காமங் களவினிற் கழிப்பி 295
ஒழுகுவனண் மாதோ வுரிமையின் மறைந்தென்.

3 14 நலனாராய்ச்சி முற்றிற்று.