பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv பாவியாகக் கம்பன் கருதி இருப்பானானால், அவனுடைய வீழ்ச்சிக்கு ஒரு காப்பியம் இயற்றி இருக்க மாட்டான்: இராவணன் வீழ்ச்சிக்கு இயற்கையும் அழுததுடன், அதனைத் தடுக்க உற்பாதம் முதலிய வற்றையும் தோற்றுவித்தது என்றும் பாடியிருக்க மாட்டான். மேலும், இராவணன் அழிவுக்கு, அவனைப் படைத்த கலைஞன் வருந்துவதுபோல வேறு யாரும் வருந்த இயலாது. இக் கருத்துக்கள் எல்லாம், 'இராவணனைப் பற்றிக் கம்பன் எக் கருத்தைக் கொண்டிருந்தான்? எக்கருத்தை நம்மைக் கொள்ளுமாறு செய்கிறான்? என்பதை நன்கு வலி யுறுத்துகின்றன. ஒரு சிலர், கம்பன் இராவணனை உயர்த்திப் பேசுவதெல்லாம் இராமன் உயர்வை மிகுதிப்படுத்தவே ஆகும் என்று நினைத்துக் கூறவும் செய்கின்றனர். இதனைவிடப் பெரிய தவற்றைச் செய்யமுடியாது. இதைவிடப் பெரும் பழியைக் கம்பன் தலைமேல் ஏற்றவும் முடியாது. இராமன் பண்பை உயர்த்தக் கம்பன் இராவணனை ஒரு கருவியாகக் கொண்டிருப்பானேயானால், அவன் ஒரு கலைஞனாகவே இருத்தல் இயலாது. இராமன், இராவணன் இவ்விரு பாத்திரங்கட்கும் அவன் பற்பல பண்புகளை ஏற்றியிருக்கிறான். இருவரும் குறைவும் நிறைவும் ஒருங்கே உடையவர். நிறைவுக்காக இருவரையும் போற்றுகின்றான் கம்பன். குறைவு காரணமாக இருவரும் அவதிப்படுகின்றனர். குறைவின் அளவிற்கு ஏற்ப, அவதியும் மிகுதிப்படுகிறது. ஒருவரோடு ஒருவரை இறுதியிலேதான் சந்திக்க வைக்கிறான். 'இராமனைப் புகழ்வதற்கு எனவே கம்பன் இராவணனை உண்டாக்கினான் என்பது