அதியமான் அனுப்பிய தூதர்
35
ஒளவையாரின் வியப்பு
பிறர் அன்புடன் அளிக்கும் பொருள் எதுவாயிலும் இன்புடன் ஏற்றுக் கொள்ளும் நல்லியல்பினராகிய ஒளவையார் அதனை இகழாது மகிழ்வுடன் வாங்கி உண்டார். அதனை உண்டபின் அதன் அமுதனைய அருஞ்சுவையினைக் கண்டார். நல்லமுதனைய இந்நெல்லிக்கனியின் இனிய சுவை புதுமையாக வன்றோ இருக்கின்றது என்று வியந்தார்.
அதியமான் அன்பும் பண்பும்
ஒளவையாரின் வியப்பினைக் கண்ட அதியமான் அதன் சிறப்புக்களை விரித்துரைத்தான். “இச்செய்திகளை முன்னரே யான் மொழிந்திருப்பேனாயின் நீர் இக் கனியினை அருந்தியிருக்க மாட்டீர்; நும்மைப் போலும் நுண்ணறிவாளர் பன்னெடுங்காலம் இப் பாருலகில் வாழ வேண்டும் என்னும் பேரார்வத்தாலேயே அதனை நுமக்களித்தேன்” என்று உவகையுடன் உரைத்தான். அதியமானின் பண்புமிக்க அன்புரைகளைக் கேட்டு அகமுருகிய தமிழ் மூதாட்டியார் அவனது உயர்ந்த பண்பை உளமாரப் பாராட்டிச் சிறந்ததொரு செந்தமிழ்ப் பாவால் அவனை வாழ்த்தினார்.
- “போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி
- பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
- நீல மணிமிடற் றொருவன் போல
- மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
- பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
- சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
- ஆதல் நின்னகத் தடக்கிச்
- சாதல் நீங்க எமக்கீத் தனையே”
“பகைத் தெழுந்த போரில் எதிர்த்து வந்த மன்னரை வென்று வெற்றிமாலை புனையும் அஞ்சியே! பால் போலும் வெண்மையான பிறைமதியைச் சடை