பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் குளிர்ந்தது

15



பழைய வரலாறு

ற்றொரு செய்தியும் இங்கே நினைப்பதற்குரியது. நாம் படிக்கிற கந்த புராணத்தில் கிரௌஞ்சாசுரன் மலைவடிவாக இருந்தான் என்பதும், தேவர்களுக்குப் பல துன்பங்களைச் செய்தான் என்பதும் வருகின்றன. பழைய வரலாறு ஒன்று உண்டு. அதை முன்பும் நாம் நினைப்பூட்டிக் கொண்டிருக்கிறோம். சூரபன்மாவுக்குக் கிரௌஞ்சம் என்ற மலை அரணாக இருந்தது என்றும், அது பறக்கும்போது அவன் உள் இருந்தான் என்றும், முருகப்பெருமான் வேலை ஓச்சியபோது அந்த வேல் கிரௌஞ்ச மலையை ஊடுருவி - அதன் உள்ளே இருந்த சூரனையும் ஊடுருவிக் கொன்றது என்றும் பழைய காலத்தில் வரலாறுகள் வழங்கி வந்தன. தக்கயாகப் பரணியில் அதனை ஒட்டக்கூத்தர் பாடுகிறார்.


"ஒருதோகை மிசையேறி உழல்சூரும் மலைமார்பும் உடனூடறப்
பொருதோகை சுரராச புரமேற விடுகாளை புகழ்பாடுவாம்"

என்பது அந்தப் பாட்டு: அருணகிரிநாதப் பெருமானும் இந்த வரலாற்றைப் பலவிடங்களில் சொல்லியிருக்கிறார்.

"கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத் தொடுவே லவனே"

என்பது கந்தர் அநுபூதி. ஆகவே இங்கே, 'சிலம்பு ஊடுருவப் பொருவடிவேலும்' என்று சொன்னாலும் சிலம்புக்குள் இருந்த சூரனையும் ஊடுருவிப் புகுந்து அழித்தது வேல் என்ற பொருளும் குறிப்பாக இருக்கிறதென்று கொள்ளலாம். கிரௌஞ்சாசுரனுக்குள் சூரன் மறைந் திருப்பது போல, சிலம்பு ஊடுருவப் பொருவடிவேல் சூரனையும் ஊடுருவிக் கொன்றது என்பது இதில் மறைந்திருக்கிறது என்று கொள்ளலாம்.