எழில் விருத்தம்
9
பாவியல்' என்னும் இலக்கணத்தில் வகுத்துத் தரப்பட்டுள்ள விருத்தப்பாவின் இலக்கணத்திற்கு ஏற்பக் கவிஞர் வாணிதாசன் தம்முடைய கவிதைகளை இயற்றியுள்ளார். இதை, அவர் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் விருத்தப்பாவியலின் இன்ன விதிபற்றி இயற்றப்பட்டுள்ளதெனத் தெளிவுறுத்தியுள்ளமையால் நாம் அறிகிறோம்.
முதன்முதலாக விருத்தப்பாவின் இலக்கணத்தை விரித்துக் கூறுவதற்காக இயற்றப்பட்டது ‘விருத்தப்பாவியல்' என்னும் இலக்கண நூலாகும். அதை இயற்றிய ஆசிரியர், தாம் வகுத்த விதிகளுக்குத் தம்முடைய நூற்பாக்களையே எடுத்துக்காட்டாகக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.
வேறு இலக்கிய எடுத்துக்காட்டுக்களையோ, இவ்விதிகளுக்கேற்பத் தாமே புதிதாகப் புனைந்த செய்யுள்களையோ அவர் எடுத்துக்காட்டாகக்காட்டிச் செல்லாக் குறையை, நம் கவிஞர் போக்க முனைந்துள்ளார். அவருக்குத் தமிழ் உலகம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.
இயற்கை அழகினைப் போற்றிப் பாடுவது தொன்று தொட்டு இலக்கிய மரபாக இருந்து வருகிறது. அன்றைய வாழ்க்கைமுறை இயற்கை யோடு இயைந்து வாழ வேண்டிய ஒன்றாக அமைந்திருந்தது. ஆனால், இன்றோ இயற்கையோடு இயைந்து வாழ முடியாத அவலநிலையன்றோ பெருகிவருகின்றது!