உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன் 13


அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தாற் கல்லால்- பிறவாழி நீந்தலறிது. தர்மங்கள் நிறைந்த சமுத்திரம் போன்ற பகவானிடம் சரணாகதி அடைபவர்களைத் தவிர, மற்றவர் உலகத் துன்பங்களை நீந்தி வெல்ல முடியாது.

இப்படிப் படிக்கையில் ஆண்-பெண் இரு பாலருக்குமே பொதுவாக இருப்பது போல் ஒரு பிரமை உண்டாகிறது.

அடுத்தாற்போல் வாழ்க்கைத் துணை நலம் அதிகாரத்தைப் புரட்டுவோம்.

தெய்வந் தொழாள், கொழு நற்றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

"பெண்ணே! உனக்குக் கொழுநன்தானே வாழ்வு? அவன் உயிரோடு இருப்பது ஒன்றில்தானே உன்னுடைய வாழ்க்கையே தொக்கிக் கொண்டிருக்கிறது? அதனால் அவனையே தெய்வமாகத் தொழு, உனக்கு அதுவே வாலறிவன் நற்றாள். அறவாழி அந்தணன்தான் மற்றும் எல்லாமும்"-என்று அல்லவா சொல்லப்படுகிறது?

ஆனால் இதையே ஆணையாகச் சொல்லாமல், விளக்கெண்ணெய் குடிக்க குழந்தைக்கு ஆசை காட்டுவது போல் இவர்களுக்கு ஒரு பூவாரம் சாத்தப்படுகிறது. 'ராஜாவாச்சே! ஜில்லுன்னு இதைக் குடிச்சிட்டு சர்க்கரையை வாங்கிட்டுக் குதிப்பாளே?' என்று சொல்வது போல, ‘உன் கொழுநனைத் தொழுவது ஒன்றைச் செய்தால், நீ மழை பெய் என்று சொன்னாலே பெய்யுமடி' என்ற ஒரு பொய்யாரம் மென்மையாகச் சாத்தப்பட்டு இவளுடைய அறிவை மறைக்கும் முட்டாள்தனத்துக்கு ஒரு பட்டுப் போர்வை போர்த்தப்படுகிறது.