எல்லாவற்றையும் உயிருள்ள தமிழில் எடுத்துச் சொல்லும் நவீனம்தான் செவ்வானம்.
ஆயினும், சகஜமாக எழுதப்பட்டு வருகிற சாதாரணக் காதல் கதை இல்லை இது. ஒரு யுவனின் ஒரு யுவதியின் காதல் உணர்வுகளை சுவையாக சித்திரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டதில்லை 'செவ்வானம்' நவீனம்.
த வாழ்க்கையில், சமூகத்தில், நாட்டில் மண்டி வளர்கிற முரண்பாடுகளையும் போலித்தனங்களையும் சுட்டிக்காட்டி, படிப்பவர்களின் சிந்தனையில் சூடேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே எழுதப்பட்ட நாவல் இது. தன்னை, தனது நலன்களை, வசதிக் குறைவுகளைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு விட்டு, மனித வர்க்கம் சமுதாய நிலை, '; o உலகம் போகிற போக்கு பணம் படைத்தவர்களின் செயல்பாடுகள், வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப் பட்டிருப்பவர்களின் தினசரி வேதனைகள் இவற்றையெல்லாம் பற்றி எண்ணி எண்ணிக் குமைகிற ஒருவனின் சிந்திக்கத் தெரிந்த ஒருசாதாரணனின்-எண்ணங்களை, மனக் குமுறல்களை வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவன் தாமோதரன். அவனுக்கு வாழ்க்கையிடமும், பலரது வாழ்வைப் பாழாக்கித் தாம் வாழ வழி வகுத்துக் கொள்கிற சிலர் போக்கிலும், சரியாக வாழ இன்னும் கற்றுக்கொள்ளாத மனிதரிடமும் வெறுப்பும் கோபமும் எழுகிறது. கலை, மதம், அரசியல், சமூக சேவை என்ற மயக்குப் போர்வைகளைப் போர்த்திக்கொண்டு, தன்னலத்தோடு - தனது மற்றும் தன்னைச் சார்ந்தவர்களது வாழ்க்கையை வளமுள்ளதாக்கிப் படாடோட வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் மீது அவனுக்கு ஆத்திரமும் கோபமும் உண்டாகின்றன.