கடற்கரை விபத்து 29
வருவதற்காகத் திருவல்லிக்கேணிக்குப் போயிருக்கிறார். அவர் இன்னம் கால் நாழிகையில் வந்து விடுவார். உடனே நாங்கள் அதன் மேல் ஏறிக்கொண்டு ஜாகைக்குப் போய்ச் சேருகிறோம். குதிரையையும், வண்டியையும் இவர்கள் எடுத்துக்கொண்டு பணம் கொடுத்து விடுவதாகச் சொல்லுகிறார்கள். அந்த மாதிரி ஏற்றுக்கொள்வது மரியாதையல்ல; குதிரையின் காயம் சீக்கிரத்தில் ஆறிப்போய்விடும்; சக்கரங்களைச் செப்பனிட்டுக் கொள்வதற்குச் சொற்பமான பணந்தான் செலவாகும். அதை நாங்களே செய்து கொள்ளுகிறோம். பரவாயில்லையென்று இவர்களிடத்தில் சொல்லி அனுப்பு' என்று நயமாகக் கூறினாள். அந்தப் பெண்மணியின் பெருந்தன்மையையும் கண்ணிய புத்தியையும் கண்ட ஜனங்கள் மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். மோட்டாரில் வந்த மனிதர் அந்தப் பெண் மயிலாரது கட்டழகையும், காந்தியையும், மேம்பாட்டையும், புத்திசாலித்தனத்தையும், உயர்வான மனப் போக்கையும் கண்டு, அவர்கள் யாரென்பதையும், எங்கே இருப்பவர்கள் என்பதையும் அறிந்துகொண்டு அவர்களது நட்பைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டுமென்ற கபடமான எண்ணங்கொண்டவராய், தாம் முதலில் சொன்னதையே திரும்பத் திரும்ப மென்மேலும் வற்புறுத்தி நயமாகக் கூறியதன்றி வண்டிக்கார மினியனை நோக்கி, "அப்பா வண்டிக்காரா! இவர்களுடைய ஜாகை எங்கே இருக்கிறது? வீட்டுக்குப் பெரியவர்களான ஆண் பிள்ளைக ளிடத்தில் நான் வந்து இந்த விஷயமாகப் பேசி, இதற்கு ஆக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தே தீர வேண்டும்” என்று நயமாகக் கூற, அதைக்கேட்ட கோகிலாம்பாள், “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். ஏதோ நடந்தது நடந்து போய் விட்டது. அதைப்பற்றி இனி கவலைப்படுவதனால் என்ன உபயோகம்? பரவாயில்லை. ஐயாவுக்கு அவசரமாக ஜோலி ஏதாவது இருக்கலாம். போய் அதைக் கவனிக்கச் சொல். இதோ வண்டி வந்துவிடும்; நாங்கள் ஜாகைக்குப் போய் விடுகிறோம்” என்று பணிவாகக் கூற, அதே சமயத்தில் செளந்தரவல்லியும் மினியனைப் பார்த்து, அடேய் மினியா! ஐயாவுடைய இருப்பிடம் எங்கேயென்று விசாரி” என்றாள்.
அதைக்கேட்ட அந்தத் தணிகர், நான் மைலாப்பூரில் சாந்தோமில் தவன விலாசம் என்னும் பங்களாவில் இருக்கி