உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் அங்காடி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38  தமிழ் அங்காடி


என்று முன்பு எண்ணினாள் அல்லவா? பின்னர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாள் அவள்,

சிவனால் உருவம் இழந்த மன்மதன், அன்று தொட்டு இன்று வரை அருந்தவம் இயற்றி மீண்டும் இந்த வடிவம் கொண்டு வந்து விட்டானோ - என எண்ணிப் பார்க்கிறாள்.

       "கற்றையஞ் சடையவன் கண்ணின் காய்தலால்
       இற்றவன் அன்று தொட்டு இன்று காறுந்தான்
       நற்றவம் இயற்றி அவ் அருங்கன் கல்லுருப்
       பெற்றனனாம் எனப் பெயர்த்தும் எண்ணுவாள்" (13)

சடையவன் = சிவன், இற்றவன். உடம்பு இற்றுப் போன மன்மதன், அநங்கன் = உடம்பு இல்லாதவன் (மன்மதன்). ந + அங்கன் = உடம்பு இல்லாதவன். இது சமசுகிருதப் புணர்ச்சி முறை, இந்தோ ஐரோப்பிய இன மொழிகளுள் சில அல்லது பலவற்றில் ‘ந’ என்பதற்கு இல்லை என்பது பொருள். இலத்தீனிலும் பிரஞ்சிலும் Non (நொ[ன்]) என்பர். ஆங்கிலத்தில் No (நோ-ந) என்பர். வடமொழியிலும் இந்தியிலும் ‘ந’ என்பர். ந என்பதன் பக்கத்தில் (அநங்கன்) ந + அங்கன் என உயிர் முதல் வருமொழிவரின், ந என்பது (ந் + அ) அந்’ என்றாகும். பின் அந் + அங்கன் = அநங்கன் என்றாகிறது. எனவே, அனங்கன் என்று சிலர் எழுதுவது பொருந்தாது. அநங்கன் என்று கம்பரைப்போல் எழுதுவதே திருத்தமானது.

மேலும் எண்ணுகிறாள்: சிவனுடைய இரண்டு தோள்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியவில்லை. அதுபோலவே, இவனதுமார்பின் பரப்பையும் ஒரே நேரத்தில் காண முடியவில்லை. அவ்வாறு காண்பதற்கு கண்கள் போதவில்லை. அந்த அளவுக்கு இரண்டு தோள்களின் இடைவெளியும் மார்பின் பரப்பும் விரிந்துள்ளனவாம்:

       "தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின்
       நீளியஅல்ல கண், நெடிய மார்பு என்பாள்” (16)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/40&oldid=1203036" இலிருந்து மீள்விக்கப்பட்டது