பகுதி]
தமிழ்மொழியின் வரலாறு
231
உயிர் நூலோர் ‘இயற்கைப் பிரிநிலை’ யென்று கூறும் சுபாவ நியமம், பாஷை வளர்ச்சியிலுங் கொள்ளப்படும். பாஷைவளர்ச்சிக்குத் தடைபயப்பனவும் பயனற்றனவு மாகியவைகளனைத்தும் பயிற்சிக் குறைவான் வழக்காறற்றுப்போக, மற்று அதன் வளர்ச்சிக்குத்தடை பயவாதனவும் பயனுள்ளுனவுமாகிய யாவையும் பயிற்சி மிகுதியான் வழக்காற்றில் நிலைபெறுகின்றன. இது பாஷை நூலிற் கொள்ளப்படும் ‘இயற்கைப் பிரிநிலை’.
இனிப் பொச்சாப்புக் காரணமாகவும் சோம்பல் காரணமாகவும் மக்கள் சொற்களைத் தக்கபடி யுச்சரிக்காமையால் அவை தம்முடைய முன்னை யுருவங் குலைந்து சிதைகின்றன. மிகவும் நீளமான சொற்களை மக்கள், காலச் சுருக்கமும் முயற்சிச் சுருக்கமும் கருதிக் குறுக்கியும் மாற்றியும் வழங்குதலால், அவை தம் முன் னுருவத்தினின்றும் வேறுபடுவன வாகின்றன. இவ்வாறு தொன்றுதொட்டு வருதலின்றி, அவ்வக் காலங்களில் இடையிலே சிலவெழுத்துக் கெட்டும் சில வெழுத்துத் திரிந்தும் சில வெழுத்துத் தோன்றியும் இலக்கணத்திற் சிதைந்து முன்னுருவம் மாறித் தாமே மருவி வழங்குவனவற்றை யெல்லாம் ‘மரூஉ’ என்பர் இலக்கண நூலார். ‘அருமந்தபிள்ளை’, ‘ஆச்சு’, ‘இருக்குது’ என்பன முதலாயின இதற்கு உதாரணமாம். ‘கற்று’, ‘சுற்று’, ‘நேற்று’ என்பன போன்ற றகர வொற்றிடையிலுள்ள சொற்கள், தகர வொற்றிடையிலுள்ள சொற்களாக உச்சரிக்கப்படுகின்றன; ‘வைத்து’, ‘தைத்து’, ‘பாய்த்து’ என்பன போன்ற சொற்களின் தகரங்கள் சகரங்களாகின்றன. இனிச் சாமானியத் தமிழ் மக்களிடை வழங்கும் மரூஉ மொழிகளி னியல்புகளை முற்ற வெடுத்துக் காட்டுதலரிதாம். எனினும் தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலைமாறுதலென்னும் ஐந்துவகைகளாக மரூஉவைப் பிரித்துத் தக்க வுதாரணங்கள் கண்டு கொள்க. ‘யாவது’, ‘மாசி’, ‘ஆனை’, ‘பேர்’, ‘விசிறி' என்பன முறையே அம்மரூஉவமைகட்கு உதாரணங்களாமாறு அறிக.
“அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்”
“ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
ஞஃகா னுறழு மென்பரு முளரே”
என்ற நன்னூலார் கூறிய மொழிமுதற் போலியும் மொழியிடைப் போலியும் வகுத்துரைக்குஞ் சூத்திரவிதிகள் யாம் மேற்கூறிய முயற்சிச் சுருக்கவியல் பினையன்றே வலியுறுத்திக் காட்டுகின்றன. ‘ஐந்து’, ‘உய்ந்தனன்’ என்ற சொற்களை யுச்சரித்தலிற் சிறிதளவு கஷ்ட மிருத்தலாற் சுகபுருஷராகிய தமிழ் மக்கள் அவற்றை ‘அஞ்சு’, ‘உஞ்சனன்’ என்று வழங்குவாராயினர்.
தெளிவு கருதியும் உச்சரிப்பு நலங்கருதியும், தமிழ்மக்கள் சில சொற்களை மாற்றி வழங்குகின்றனர். உதாரணமாகப் ‘பெண்’ என்ற சொல்லைப் ‘பெண்டு’ என்றும் ‘நிலம்’ ‘கலம்’ என்பவற்றை ‘நிலன்’ ‘கலன்’ என்றும் முறையே எழுத்துக் கூட்டியும் ஓரெழுத்தைப் பிறிதோ ரெழுத்தாக மாற்றியும் உப