24
விளக்கம் : யாவரிடத்தும் விருப்பு வெறுப்பில்லாதவன் இறைவன் என்பது உணர்த்துகின்றது.
என்பில்லாத உடம்பை வெயில் தெறுமாறு போன்று அன்பிலாதாரை ஒறுத்துத் திருத்துதல் அறவுருவினனாகிய முதல்வனது இயல்பென்பார், 'நண்ணார்க்கு நலமிலன்' என்றும், தம்மைப்போன்றே தம் அடியார்களும் இன்புருவினராய்த் திகழும் வண்ணம் பேரருள்வழங்குதல் இன்புருவினனாகிய அவனது அருளின் நீர்மையென்பார், 'பேர் சங்கரன், நண்ணினர்க்கு நல்லன், என்றும், இவ்வாறு தன்னைச் சாராதார்க்குத் துன்பமும் சார்ந்தார்க்கு இன்பமும் விளைத்தலால் இறைவன் விருப்பு வெறுப்பு உடையவனோ என்னில், அம்முதல்வன் வேண்டுதல் வேண்டாமையிலான் என்பார் 'சலமிலன்’ என்றும் கூறினார்.
இதனால்,
வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க் கியாண்டு மிடும்பை யில’ (திருக்குறள்-4)
எனவரும் தெய்வப்புலவர் வாய்மொழிக்கு விளக்கங் கூறியவாறு. இறைவனடி சேர்ந்தார்க்கு யாண்டும் பிறவித்துன்பங்கள் உளவாகா எனவே, அவனடி சேராதார் மனக்கவலையுட் பட்டுப் பிறவிக்கடலில் அழுந்தித் துன்புறுவர் என்பதும் அறிவுறுத்தாராயிற்று சலம்-வஞ்சனை; நடுவுநிலையின் வழுவி ஒருபாற் சாய்தல்
"சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடெறும் நல்கு வான்நலம் குலமில ராயினுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே’ (4-1-6)
என வரும் திருநாவுக்கரசர் வாய்மொழியும்.