உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

குயிற் பாட்டு

இன்னிசைத்தீம் பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை
முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்
பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன்யான்;
கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர் 25
இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்,
“மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாரோதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?” 30
என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்;
அன்றுநான் கேட்ட(து) அமரர்தாங் கேட்பாரோ?
குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்; 35
விந்தைக் குரலுக்கு, மேதினியீர்! என்செய்கேன்!

2. குயிலின் பாட்டு

          காதல், காதல், காதல்,
          காதல் போயிற் காதல் போயிற்
          சாதல், சாதல், சாதல் (காதல்)
1.அருளே யாநல் லொளியே;
          ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின்,
          இருளே, இருளே, இருளே. (காதல்)
2.இன்பம், இன்பம், இன்பம்;
          இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
          துன்பம், துன்பம், துன்பம். (காதல்)
3.நாதம், நாதம், நாதம்;
          நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
          சேதம், சேதம், சேதம். (காதல்)
4.தாளம், தாளம், தாளம்;
          தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
          கூளம், கூளம், கூளம். (காதல்)