14
லா. ச. ராமாமிருதம்
அவனுக்குக் காப்பியைக் கொடுத்துச் சமாதானப்படுத்தி உட்காரச் சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறேன். ஆச்சு, இன்றிரவு இன்னொரு ‘தம்’ பிடிச்சாகணும். இன்னொரு பத்திரிகையில் இன்னொரு தொடர்கதை இன்ஸ்டால்மென்ட் - காலையில் ஆள் கிங்கரன் மாதிரி வந்து விடுவான். பெரிய இடம்.”
”நீ சொல்வது எனக்கு பயமாயிருக்கிறது.
”ஆரம்பத்தில் எனக்கும் பயமாய்த்தானிருந்தது. ஆனால் வண்டியைக் கிளப்பிவிட்டால் அப்புறம் அது தானே ஓடவேண்டியதுதானே! கேட்கப்போனால் இந்த மாதிரி நெருக்கடியில்தான் எனக்குக் காரியமே நடக்கிறது. அதிலேயே ஒரு குஷியிருக்கிறது.”
”அப்போ உன்னுடைய தூக்கம், ஒய்வு.”
”அதெல்லாம் பார்த்தால் முடியுமா? தூக்கத்துக்கு மாத்திரையிருந்தால் மாற்றுக்கும் மாத்திரைகள், உற்சாக மாத்திரை, இன்னும் தென்பு ஊட்டிக்க வழிதானாயில்லை?”
“எழுதினதைத் திருப்பிப் பார்ப்பது, திருத்துவது?"
வாய்விட்டுச் சிரித்தார். "என்ன ஜோக் அடிக்கிறீர்! கையை விட்டுப் பிடுங்கிண்டுன்னா போறான்! ஆளை விட்டா போறும். இதுக்கேதான் அல்வா மாதிரி விழுங்கக் காத்திருக்கான்களே! ரவா ஆனியன் ரோஸ்ட் ரெடி!” - கேலியாக உரக்கக் கத்தினார். ”திருப்பிப் போடக்கூடத் தேவையில்லை. தகரத்தின் சூட்டிலேயே மறுபக்கமும் வெந்துவிடுகிறது, ஹஹ்ஹா..!”
சட்டென்று என் பக்கம் திரும்பினார்.
”இது ஜெட்யுகம், ஞாபகம் வைத்துக்கொள்ளும். இருக்கின்றது என்று போடலாமா, ‘இருக்கிறது’ என்று