பாற்கடல்
43
என் பாட்டிக்குச் செல்லமாக நான் ‘பெரிய தீவட்டி’ என் தம்பி ‘சின்ன தீவட்டி’. அவளுடைய கடைசிப் பிரயாணத்தில் தீவட்டி பிடித்துச் சென்றது நினைவு வருகிறது.
பெற்றோர்கள்கூட குடும்பச் சூழ்நிலை காரணமாக மிரட்டுவார்கள்.
”மத்தவாளுக்கு வேணும். உன் வீதம் ஆச்சோன்னோ? உனக்கு மட்டும்தான் வயிறா? பிறத்தியார் பங்குக்கு இப்படி அலையாதே!”
ஆனால் பாட்டி, தன் பங்கையும் பேரக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவாள். பாட்டி என்கிற சத்தியமும் அதுதான். பெருந்திருப் பாட்டியும் அப்படித்தான்.
தாராமல் இருப்பாளோ அவள் என்ன சத்தியம் மறந்தவளோ?
சந்தர்ப்பக் குறைவில் தன் குழந்தைகளுக்கு அந்த நாள் மறுத்ததைப் பின்னால் மனமுவந்து ஈந்து, பிராயச்சித்தம் அடைவதற்குத்தான் பாட்டி நிலை.
என் குலதெய்வமும் கன்னியாகுமரியும் என் இலக்கிய வாழ்வை, என் எழுத்தை பாதித்தவர்கள்.
மிகவும், ‘கொஞ்சம்’ அடைமொழிகளை, வேணுமென்றே விலக்குகிறேன். பாதிப்பு என்கிறபோதே அதில் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை. பாதித்தது பாதித்ததுதான். நெருப்பின் ‘சுறிலு’க்குகூட குறைச்சல் உண்டா? அல்ல ‘சுறீலு‘க்குப் பழகிப்போவது என்பதும் உண்டா?)
பெருந்திரு நெஞ்சை உருக்குகிறாள் என்றால் கன்னியாகுமரி நெஞ்சை உலுக்குகிறாள்.