இலக்கியப் படைப்பின் பின்னணி 17
அறிபவனுக்கு மிக நெருக்கமாக வருகிறது. பிரபஞ்சத்தை அறிய இவர்கள் உள்ளுணர்வையே நம்புகிறார்கள். விஞ்ஞான முறைகளை உதறித் தள்ளிவிடுகிறார்கள்.
சுதந்திரம் இவர்களுக்கு மிக முக்கியமான கொள்கை. மனிதன் முன்னால் பல வாய்ப்புகள் இருப்பதில் அவனுக்கு இஷ்டமானதைத் தேர்ந்துகொள்ளும் உரிமையே சுதந்திரம் (Voluntary choice). இங்கு சூழ்நிலையை, மனிதனது தேர்ந்தெடுக்கும் உரிமையினின்று பிரித்து விடுகிறார்கள். சுதந்திரத்தை ஓர் ஒழுக்கப் பிரச்சினையாக்கி மிக மிஞ்சிய தனிமனிதத்தை (Extreme individualism) இவர்கள் குறிக்கோளாகக் கொண்டு வழிபாடு செய்கிறார்கள். சமூகத்திலிருந்து மனிதன் சுதந்திரமடையவேண்டும் என்ற கோரிக்கையும் இதனின்றும் எழுகின்றது. சமூகநிலைகளையும் முரண்பாடுகளையும் வரலாற்றுண்மைகளையும் மறுத்து, ‘மனிதன் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்கிறான்’ (Man is what he makes himself); இவ்வாறு உருவாக்குவது புறவய சமூக விஞ்ஞான விதிகளுக்கு உட்பட்டு அல்ல; மனித உள்ளத்தின் நிகழ்ச்சிகளும் சுதந்திர ஆர்வமும் சமூக நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டன என்று இவர்கள் கூறுகிறார்கள்.
சார்த்ரே இந்த அகவயமான, ஆன்மீகக் கொள்கைகளை, இதற்கு நேர்முரணான மார்க்சீயத் தத்துவங்களின் அடிப்படையில் விளக்க முயன்றார். அதனால் விசித்திரமான பல முரண்பாடுகள் சர்ரியலிசக் கொள்கையில் தோன்றின.
இக்கொள்கையின் செல்வாக்கு ஐரோப்பிய இலக்கியத்தில் மிகுதியும் உண்டு. போராடும் வர்க்கங்களிடையே ஊசலாடும் அறிவாளி வர்க்கத்தின் முரண்பாட்டிற்கும் சிந்தனை வறட்சிக்கும் இது ஓர் உதாரணம். இதன் செல்வாக்கு எந்த அளவு தமிழ்ப் படைப்பிலக்கியங்களில் உள்ளன என்று ஆராய வேண்டும்.
இக்கொள்கைகள் யாவும் அகவயமானவை. சமுதாய வளர்ச்சியின் காரணங்களும், மனிதனுக்கு மனிதன் உற்பத்தி முறையில் உறவு ஏற்படும் போக்குகளும், வர்க்கப்பிரிவு, முரண்பாடுகள், போராட்டங்கள் இவை யாவும் அவர்கள் நோக்கில் படுவதில்லை. முதலாளித்துவச் சமுதாயத்தை ஒழிக்க முன் னணிப்படையாக நிற்கும் தொழிலாளி வர்க்கத்தையும் அதன் வெற்றிகளையும் அவ்வெற்றிகளால் மனிதன் உலகிலேயே இன்ப வாழ்வு பெறலாம் என்று நம்பிக்கை கொள்வதையும் அவர்கள் மறுக்கின்றனர். சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தைக் கண்களை மூடிக்கொண்டு பார்க்க மறுக்கிறார்கள்.