இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அலைகடல் மீது பனித்திரை விலக்கி
அலர்ந்தது பொற்கதிர்! வாழி!
உலகினில், ஊனில், ஊனிடை உயிரில்
உவகையின் மிகுதியைக் கண்டோம் !
கலகலப் போடு 'பொங்கலோ பொங்கல்!'
கலந்தது விண்ணிடை எங்கும்!
மலரணி பெண்கள், கன்னியர், காளை
வாழ்த்தொலி யோடுநம் வாழ்த்தே !
1
உழவனை வாழ்த்தி, ஒளிக்கதிர் வாழ்த்தி,
உயிரினம், கார்முகில் வாழ்த்திப்
பழகிய அன்னைத் தமிழ்மொழி வாழ்த்திப்
பைந்தமிழ் நாட்டினை வாழ்த்தி,
அழகிய தாய்மார் இணையுடன் ஆட,
அருவிகள், வண்டுகள் பாட
ஒழுகிய பொங்கல் நெய்யினைச் சுவைக்கும்
ஒண்சிறார் வாழ்த்தொடு வாழ்த்தே !
2