21
விடுவதில்லை. தானும் ஒரு உண்ணும் நீராக மாறி, உண்பவர்களின் வயிற்றில் போய், அவர்களை வாழ வைத்துத் தான் மடிந்து விடுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்! இதற்காக, அது எந்தப் பலனையும் எவரிடமும் எதிர்பார்ப்பதில்லை.
(ஆ) மஞ்சட்காமாலை நோய் வந்தால், கீழா நெல்லிச் செடி எங்கே இருக்கிறது என்று தேடிப் பிடித்து, அதை வேரோடு பிடுங்கி அம்மியில் வைத்து ஒரே அரைப்பாக அரைத்து, நோயாளிக்குக் கொடுத்து விடுகிறார்கள். நோயாளி பிழைத்துக் கொள்கிறான் மருந்துச் செடி பூண்டோடு அழிந்து விடுகிறது. இவனைப் பிழைக்க வைப்பதற்காகவே, அது பிறந்து வளர்ந்தது போன்று காணப்படுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்!
(இ) கோழிகளை ஒருவன் விலை கொடுத்து வாங்கித் தன் வீட்டில் விட்டு வளர்ப்பான். அதற்கு இவன் தீனி போடுவதில்லை. பக்கத்து வீட்டில் போய் அரிசியைத் தின்று விட்டு, இவன் வீட்டில் வந்து முட்டையை இடுகிறது. இவனையும், இவன் பிள்ளை குட்டிகளையும் தன் முட்டையைக் கொடுத்து வளர்க்கிறது. இறுதியில், தானும் அவர்களுக்கு உணவாகி, அடியோடு அழிந்து போய் விடுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்! இதற்காக அது அடைந்த பலன்?
(ஈ) ஆடு இன்னும் ஒரு படி அதிகம். மலைகளிலும், காடுகளிலும் அலைந்து திரிந்து, தானே உணவைத் தேடித் தின்று விட்டு, இவன் வயலைத் தேடி வந்து எருவிடுகிறது. தன்னை விலை கொடுத்து வாங்கியவனின் உணவு உற்பத்திக்குப் பெருந்துணை செய்து, இறுதியில் அவனுக்குத் தன்னையே உணவாகவும் தந்து மடிந்து விடுகிறது. எவ்வளவு பெரிய தியாகம்! இதற்காக அது அடைந்த பலன்?