விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 4
உடனே தொடரவேண்டும் என்று டாட் அவர்களை கேட்டேன். ஐந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இருந்தால், நீங்கள் நேரடியாகவே தேர்வ எழுதலாம். நீங்கள் பணியில் சேர்ந்தே ஒராண்டு தானே ஆகிறது! கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று, என் ஆவேசத்திற்கு அணையிட்டுப் பார்த்தார்.
படிக்க வேண்டும் என்ற பயங்கரமான பசி. என்னைப்பிடித்துக் கொண்டது மட்டுமன்றி, இரவுபகல் என்று பாராது, என்னை ஆட்டி அல்லாட வைத்தது.
கல்லூரி ஆசிரியர் என்று என்னை அறிவில் உயர்த்திக் கொள்ள முதலில் முனைந்த எனக்கு, இந்த நிகழ்ச்சி இன்னும் பெரும் முனைப்புடன், என்னை இயக்கி விட்டது. ஏன்? முடுக்கி விட்டது என்றே கூறலாம்.
இந்தத் தருணத்தில், இன்னொரு நிகழ்ச்சியும் நிகழ்ந்தது.
ஒரு நாள், பேராசிரியர் குழந்தைநாதன் அவர்களுடன் ஒரு நாடகக்கதை பற்றிய உரையாடல் நடந்தது. அந்தக் கதைபற்றிய சுருக்கத்தை இரண்டு பக்க அளவில் எழுதிக் காண்பித்தேன்.
அவர் என்னுடைய கதை அணுகுமுறையைப் படித்துப் பார்த்து விட்டு, நீங்கள் புத்தகம் கூட எழுதலாம் போலிருக்கிறதே! நீங்கள் ஏன் என்னைப் போல், நூல்கள் எழுத முயற்சிக்கக் கூடாது? என்றார்.
அவர் ஐந்து நூல்களுக்கு ஆசிரியராக இருந்ததால், என்னைப்போல், என்று ஒர் அழுத்தம் தந்து பேசினார்.
அவர் கூறிய யோசனை எனக்குப் பிடித்திருந்தது.
ஆனால், எதைப்பற்றி புத்தகம் எழுதுவது?
நாடகம் எழுதுகிறேன். அது எனக்கு எளிதாக இருக்கும்.