வீரகாவியம்
20
மாவேழன் ஏறிவந்த பரிமா தன்னை
வயந்தநகர்ப் பெருவீரர் கவர்ந்து சென்றார்.
வயந்தநகர்ப் பெருவீரர் சிலர்தாம் கூடி
மலைச்சரிவின் நெறியிடையே வருவோர் ஆண்டு
வயங்கெழுமும் ஒருபரிமான் கலனை யின்றி
வாய்பற்றுங் கடிவாளக் கட்டு மின்றி
நயந்துபசும் புன்மேய்ந்து திரியக் கண்டார்;
நல்லியல்சேர் இவுளியதன் தோற்றங் கண்டு
மயங்கினராய்க் கவர்ந்துசெலக் கயிறு வீசி
மடக்கினர்அம் மாமடங்கல் மடங்க வில்லை.19
திடங்காணும் அம்மறவர் திரண்டு நின்று
திறமுழுதும் பயன்படுத்தி முயன்றா ரேனும்
அடங்காது தப்பியது வேழன் பாய்மா;
ஆசைமனம் அடங்காமல் எழுந்து விட்டால்
படும்பாடு படுவரன்றி விட்டார் யாரே?
பாய்புரவி பற்றுதற்கே முனைந்து நின்றார்;
கடன்காரன் இரக்கமிலார் நடுவில் நின்று
கலங்குதல்போல் அப்பரிமான் கலங்கக் கண்டார்.20
வயம்–வெற்றி, கலனை – சேணம். இவுளி–குதிரை.
மாமடங்கல் –சிங்கம் போன்ற குதிரை.