பக்கம்:வீர காவியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

காட்சிப் படலம்

இயல் 5

வழிபல கடந்து வருமா வேழன்
கழிமிகு களைப்பாற் கண்ணயர்ந் திருந்தான்,

வழிகடந்த தளர்வகற்றி, வேட்டம் ஆடி,
      வருத்துபசி களைந்தொருபால் ஆலின் நீழல்
விழிகுவிந்து துயிலுமுனம் பரிமு கத்து
      வீக்குகடி வாளமொடு சேணம் மாற்றிக்
கழிமிகுந்த நடையலுப்புக் களைவான் வேண்டிக்
      கட்டவிழ்த்துப் புற்றரையில் மேயச் செய்து,
வழியடர்ந்து கொடிபடர்ந்த கான கத்தில்
      வட்கார்தம் எல்லை தனிற் கண்ண யர்ந்தான்.17

மேய்கின்ற அப்பரிமான் அவற்குத் தோழன்;
      மெய்வலியும் மனவலியும் மிக்க தாகும்;
பாய்கின்ற வேகத்திற் காற்றை விஞ்சும்;
      பாரிலதை நிகர்க்கின்ற பரியொன் றில்லை;
மேய்கின்ற பொழுதத்தும் அவனை நோக்கி
      மென்புல்லைச் சுவைத்திருக்கும்; கதிரோன் மேற்கில்
சாய்கின்ற வேளைவரக் கனைத்த வண்ணம்
      சரிவிலது திரிந்ததுவே அங்கு மிங்கும்.18



வீக்கு - கட்டிய, வட்கார் - பகைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/22&oldid=911414" இலிருந்து மீள்விக்கப்பட்டது