பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அதிகமான் நெடுமான் அஞ்சி


ஔவையாருக்கு உண்மை விளங்கியது. தொண்டைமான் போரில் ஈடுபடுகிறவன் அல்லன் என்பதை அறிந்துகொண்டார்.

தொண்டைமான், “அதிகமான் படைக்கலக் கொட்டில் இதில் பாதியாவது இருக்குமா? அங்கே படைக் கருவிகளைக் கருத்துடன் திருத்தமாகப் போற்றி வருகிறார்களா ?” என்று கேட்டான்.

ஔவையார் என்ன சொல்வதென்று சிறிதே சிந்தனையுள் ஆழ்ந்தார்.

தொண்டைமான், “அவன் கொட்டிலையும் இதையும் ஒப்பு நோக்கும்போது இதன் பெருமை உங்களுக்குத் தெரிகிறதென்று நினைக்கிறேன். அதனால் தான் நீங்கள் அங்குள்ள நிலையைச் சொல்ல நாணுகிறீர்கள் போலும் !” என்றான்.

தமிழ்ப் பெருமாட்டிக்கு இந்த வார்த்தைகள் நயமுடையனவாகத் தோன்றவில்லை. ‘கொலு வைத்தது போல இவற்றை வைத்துக் கொண்டாடுகிறான். இந்தப் படைக்கலங்கள் வீரர்கையில் ஏறி எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். இதை ஒரு பெருமையாக எண்ணுகிறானே?’ என்பதை நினைக்கையில் அவருக்கு உள்ளூறச் சிரிக்கத்தான் தோன்றிற்று. அதிகமான் பெருமையை வெளியிட வாய்ப்பான சமயம் வந்திருக்கிறதென்று மகிழ்ந்தார். “அதிகமானிடம் உள்ள படைக்கலங்களுக்கும் இங்குள்ளவற்றுக்கும் எத்தனையோ வேறுபாடுகள். இங்கே இவற்றைத் தெய்வமாக அல்லவா வைத்துப் போற்றுகிறீர்கள் ? அங்கே-”

“அங்கே இப்படி இல்லையா? படைக்கலக் கொட்டில் இருக்கிறதல்லவா?”

“இருக்கிறது, இருக்கிறது. ஆனால் அங்கே படைக்கலங்களைத்தான் சேர்ந்தாற்போல் காணமுடியாது.”