66
அன்பு மாலை
ஆணவத்தை மிகஅடக்கி அவித்தையினை நீறாக்கி
மாண்அவத்தை யாவையுமே மாண்டிடவே மேல்போனார்
காணலுற்ற பொருளெதுவோ அதுவேதான் கண்டிடுவான்
பேணலுற்ற ராமசுரத் குமாரென்னும் பெரியவனே.
மந்திரங்கள் வேண்டா, மதிவேண்டா; எழுத்தணிந்த
எந்திரங்கள் வேண்டா; இசைவேண்டா; பற்பலவாம்
தந்திரங்கள் வேண்டாமல் சாரும் அருணையினில்
வந்தபிரான் ராமசுரத் குமார்பாலே வந்தணைமின்.
சிவபூசை செய்வார்கள் சேருகின்றார் அவன்பாலே;
நவமான யோகியர்கள் நாடுகின்றார்; ஞானியரும்
தவயோகி மற்றிவனே சரணாம்என் றணைந்தனரால்;
குவையாரும் தயையுடையான் ராமசுரத் குமார்யோகி.
எள்ளுள்ளே எண்ணெயென இருக்கின்றான் இறைவனென
அள்ளும் கவிஞரெலாம் அன்றுரைத்துப் போயினார்;
மெள்ளமெள்ளக் காண விழைவுற்றோம் காணரியோம்;
நள்ளரிய ராமசுரத் குமார்பாலே நண்ணு மினே.
கானத்தால் - இறைவனைப் பாடும் இசையால், அள்ளும்-நெஞ்சை அள்ளும்.
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
ஆனந்த அறிவாகி அனைத்து மாகி
ஆகமமாய் வேதம்சொல் கருத்து மாகித்
தானந்த மில்லாத பொருளு மாகிச்
சராசரங்கள் எல்லாமாய் யோக மாகி
வானந்த மாயஐம் பூத மாகி ,
மதியாகிக் கதிராகி அங்கி யாகி
தான்தானா யுள்ளஅந்தப் பெருமான் தன்னைச்
சார்ராம சுரத்குமார் உருவில் கண்டேன்.
வான்- ஆகாசம், மதி- சந்திரன், கதிர் - சூரியன், அங்கி - அக்கினி.