பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வெட்டுக்களும் உள்ளன. மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லக்கூடிய பெரிய சாலைகளின் அருகிலும், உயர்ந்த பாறைகளிலும் அசோகர் தம் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த விரும்பிய செய்திகளை வரைந்து வைத்ததால், நாட்டின் பல பகுதிகளிலும் பெரும்பாலான மக்கள் அவற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அசோகர் காலத்தில் பாரத நாடு ஆசியப் பேரொளியாக விளங்கிற்று என்பதை அவர் கல்வெட்டுக்களிலிருந்தே கண்டு கொள்ளலாம். போர் முழக்கங்களைத் தருமப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தினார்; ஆயுதச் சாலைகளை அன்பு வார்க்கும் ஆலயங்களாக்கினர்; குத்தியும் வெட்டியும் கொன்று குவித்துக்கொண்டிருந்த மக்களெல்லாம் தம்மைப் போல் மனமாற்றம் அடையும்படி செய்தார்.

அசோகருடைய கட்டளைகள் பெரும்பாலானவை அவர் மக்களுக்குச் செய்யும் அறிவுரைகளாகவே அமைந்துள்ளன. அவற்றில் எவ்வித ஆடம்பரமும் இல்லை. அவை எளிய சொற்களில், யாவரும் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, அவை மனத்தோடு மனம், ஆன்மாவோடு ஆன்மா பேசுவதுபோல் அமைந்திருக்கின்றன. பெரும்புலவர்கள், கவிஞர்கள் வழங்கும் சொற்றொடர்களை யெல்லாம் நீக்கி, உயர்வுநவிற்சி அணிகள் இல்லாமல், அருள் மிகுந்த அசோகர் அவ்வக் காலத்தில் தமக்குத் தோன்றிய உயர்ந்த கருத்துக்களையே கல்வெட்டுக்களாக அமைத்திருக்கிறார் மாபெரும் கல் தூண்களை நடுதல் அசோகருக்கு முன்னர்ப் பாரசீகத்து