பக்கம்:அலைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 லா. சா. ராமாமிருதம்

 தீர்த்துக் கொள்வதுபோல், சமுத்திரம் பொங்கிப் புழுங்கிப் பெருகியது. அலைகளுக்கப்பால் கடல் ஜலம் பெருமூச்செறிந்து கொண்டு விம்மி வடிந்தது. அதன் மனத்தின் கரிப்பு அதன் உப்பில் துப்பிற்று.

அலைகள்-----

அத்துமீறிய மகன், அப்பனின் முகத்துக்கெதிரில் முஷ்டியையாட்டிப் பழிக்கும் லக்ஷணமாய்,மங்கிச்சலித்த சூரியனைச் சண்டைக்கிழுப்பதுபோல், எட்டி எட்டி ஆர்ப்பரித்தன. அடிக்க ஓங்கிய கைபோல், ஒவ்வொரு அலையும் அதன் முழு வீச்சுக்கு உயர்ந்தபின், நடுவில் பிளந்து அதினின்று வெண்ணுரை சொரிந்தது. அவை கரையண்டை வரும் போதே வாரி வாயில் போட்டுக்கொள்வதுபோல்தான் வந்தன. அவை எழும்பிவரும் பயங்கரத்தைக் காணச்சகிக்காமல் அவள் பின்னடைந்தாள். ஆயினும் அவள் கணவன் அவள் கையைப் பிடித்து அலைப்புறமாய் இழுத்தார். அன்றுதான் புதிதாய்ப் பார்ப்பதுபோல், பயத்தால் வெறித்த அவள் கண்கள், அவள் கையைப் பிடித்த அவள் கணவன் கைமேல் பதிந்தன. ரொம்பவும் வயதாகாவிடினும் அவர் கையில் சதைசுண்ட ஆரம்பித்துவிட்டது. எலும்பும் நரம்பு முடிச்சுமாய் அவர் பிடி, சாவின் பிடிபோலவேயிருந்தது.

“அடி அசடே -என்ன பயம்? இத்தனை பேர் குளிக்கல்லே?”

ஆம்; எத்தனை பேர்! எத்தனை தலை, எத்தனை கை, எத்தனை உறுப்புக்கள்! பலநாளின் விரகத்தை ஒரே நாளில் தணித்துக் கொள்வது போல் அலைகள்-கடலின் அத்தனை கைகள் போல், குளிப்பவரைத் தூக்கித் தரையில் வீசிறியெறிந்து, ஆடைகளை அலங்கோலமாக்கி அணைத்தன. ஆடை நனைந்ததுமே அவரவர் உடலின் உருவகம் வெளிப்பட்டது. ஆனால் அவளைத் தவிர மற்றவர் அத்தனை பேரும் கிரஹண ஸ்நானத்தை அனுபவித்த வண்ணமாய்த் தானிருந்தனர். ‘குக் குக்குக்கூ- கெக்கெக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/26&oldid=1284275" இலிருந்து மீள்விக்கப்பட்டது