பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


எர்ணாகுளமா? அது எங்கே இருக்கிறது?" விகர்ப்பமில்லாமல் கேட்டாள் கண்ணா. அவள் படிக்காதவள். கோயிலூர் எலிமெண்டரி ஸ்கூலோடு அவள் படிப்பு முடிந்து விட்டது.

"எர்ணாகுளம் மலையாளத்தில் இருக்கிறது: ஏன், உனக்கு யானைகள் என்றால் பயமா? கண்ணாவிடம் கொஞ்சலாகப் பேசினான் கண்ணப்பன்.

"இந்த வீட்டை விட்டு எங்கே போனாலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனல் மலையாளத்தில் போய் நான் யாரோடு பேசுவது என்றுதான் யோசனை!"

"மாமியார் ஊமையாக இருந்தால் மருமகளுக்கு சந்தோஷம்: மனைவி செவிடாக இருந்தால் புருஷனுக்குச் சந்தோஷம்! இப்போது நாம் போகிற இடம் நம் இரண்டு பேருக்குமே நிம்மதியைத் தரும், கவலைப்படாதே!" என்று அவளைத் தயார்ப்படுத்தி விட்டான் கண்ணப்பன்.

கண்ணப்பனும் கண்ணாவும் எர்ணாகுளத்திற்கே குடியேறப் போகும் சேதி கோயிலுாா் முழுதும் பரவியது.

"ஆணாே, பெண்ணாே-ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டுதான் இந்த வீட்டுப்படி ஏறவேண்டும் என்று முத்துக்கருப்பர் கண்டிப்பாகச் சொல்லி கண்ணாத்தாளை வெளியே தள்ளிவிட்டாராம்! என்ன இருந்தாலும் பெரியவர் இப்படிச் செய்திருக்கக்கூடாது. பிள்ளை பிறக்கவில்லை என்பதற்காக வீட்டுக்கு மூத்தவனை வீட்டைவிட்டுத் துரத்துவது நம் ஜாதிக்குப் பழக்கமா? முத்துக்கருப்பருக்கு எப்போதும் ஈவு இரக்கம் இருந்ததே இல்லை. இந்தத் தகவல் துாத்துக்குடி உப்பளத்திலே வேலை பார்க்கும் சின்னவன் சொக்கநாதனுக்குக்கூடத் தெரியாதாம்! அண்ணன் தம்பிகள் என்றால் ராமர்-லெட்சுமணர் மாதிரி அவ்வளவு ஒற்றுமை!"

கண்ணப்பன் எர்ணாகுளத்திற்குப் புறப்படும் முன்னரே இந்த ஊர்ப்பேச்சுக்கள் அவன் காதுக்கும் போய் விட்டன.

"அத்தான் ஊர் என்ன சொல்லுவது? நானே கூட அந்தச் சபதத்தோடுதான் இந்த வீட்டை விட்டு இறங்குவதாக இருக்கிறேன்.'"

"கண்ணா"

"என்னுடைய சபதத்தை நான் மாற்றிக் கொள்வதாக இல்லே! இது உங்கள் மீது சத்தியம்!” கண்ணாவின் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்த்தது.