பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீயும் நானும் லட்சியத்திற்காக கொஞ்ச நாட்களுக்கு நடிக்கவேண்டும்." என்று செல்லமாக அவள் கன்னத்தில் தட்டினான். பசுவின் உடம்பெல்லாம் பரவியிருக்கும் ரத்தம்தான். மடுவிற்கு பாலாக வந்து பயனளிப்பதுபோல் பெண்ணின் உடம்பெல்லாம் துளிர்த்து நிற்கும் இளமை அனைத்தும் ஒன்று திரண்டு அவள் கன்னத்தில் குவிந்து தன் கணவனை மகிழ்விக்கிறது. அதிலும் கண்ணாத்தாள் தேவசுந்தரி மாதிரி அழகுடையவள். நடுத்தரவயதுக்கு அவள் வந்துவிட்டிருந்தாலும் குழந்தையில்லாத காரணத்தால் குன்றாத இளமையோடு விளங்கினாள். அவளது உடலின் ஒவ்வாெரு பகுதியும் ஜல்லிக் கட்டுக் காளையின் அவயவங்களைப் போல் தினவெடுத்து நின்றன. அரும்பு மல்லிகைகளை ஆரமாகத் தொடுத்தது போன்ற அவளது பல் வரிசை அரைகுறையாகத் தெரியும்போது திருவில்லிபுத்துார் ஆண்டாளே 'தரிசனம்' தருவதுபோல் இருக்கும். பீமனின் வலிமையைக் கண்டு துரியோதனாதியர் பொறாமைப்பட்டதைப் போல கண்ணாத்தாளின் அழகைப் பார்த்து பொறாமைப்படாத பெண்களே இல்லை!

கண்ணாத்தாள் அதிகமாக வெளியில் வருவதில்லை. 'தன் உடம்பை யாரும் புரிந்து கொள்ளும்படியாக அவள் நடந்து கொள்வதை தவிர்த்து வந்தாள். கள்ளத்தனமாகக் கர்ப்பம் தரித்தவர்கள் யாருக்கும் தெரியாமல் வயிற்றை மறைத்துக் கொள்வதைப்போல, கர்ப்பமே தரிக்காத கண்ணாத்தாளும் வயிற்றை மூடிக்கொண்டே நாட்களைக் கடத்தினாள். துன்பங்களும் கடமைகளும் பெண்களுக்குத்தான் அதிகம். பாயசம் சாப்பிட்ட நாக்கில் நெய்படிவதில்லை; ஆனால் அதைச் சாப்பிடும் போது கையில் ஒட்டிக் கொள்ளும் நெய்யைத் துடைப்பது ஒரு வேலையாகவே வந்து விடுகிறது. அது மாதிரித்தான் மனித வாழ்க்கையும் சுவையெல்லாம் ஆண்களுக்கு: சுமையெல்லாம் பெண்களுக்கு.

ஒன்பது மாதம் ஆகிவிட்டது. ஊரிலிருந்து கடிதங்கள் வந்த வண்ணமிருந்தன. கண்ணாத்தாளைப் பிரசவத்திற்கு ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கண்ணப்பன் வீட்டிலிருந்தும், கண்ணுத்தாள் வீட்டிலிருந்தும் எழுதிக்கொண்டே இருந்தார்கள். கடிதங்களைப் படிக்கப் படிக்கக் கண்ணப்பனுக்கே ஒரு உணர்ச்சிப்பிறந்து விட்டது. கண்ணாத்தாள் உண்மையிலேயே கர்ப்பமாக கிடப்பது போன்ற உணர்வு அவனுக்கு வந்து விட்டது.

"அத்தான்!”

"என்ன கண்ணா!"