பக்கம்:ஆத்மஜோதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

ஆத்மஜோதி

கந்தர் அநுபூதி


(கி. வா. ஜ.)

முருகனுடைய பெருமையைப் பாடிய கவிவாணர்கள் முற்காலத்திலும் பிற்காலத்திலும் பலர். திருமுருகாற்றுப்படையில் தொடங்கிய அவன் புகழ் வரவரப் பெருகி வளர்ந்து வருகிறது.

முருகனைப் பாடியவர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். தமிழ்ப் புலமை வாய்ந்தவர்கள், முருகன் அருளைப் பெற்றவர்கள் என்று. தமிழ்ப் புலமையும் அருட்பெருக்கும் ஒருங்கே உடையவர்கள் சிலர். அவர்களுள் மிகச் சிறந்தவர் அருணகிரிநாதர். முருகனுடைய அருளனுபவத்திலே ஊறினவர் என்பதை அவருடைய திருவாக்காகிய பாடல்கள் காட்டும். அநுபவ உறைப்பிவே தலைசிறந்தவர் அருணகிரிநாதர் என்பது மாத்திரம் அன்று. அளவினாலும் அவர் பாடியவை மிகுதியாக உள்ளன. அவர் பாடியவை திருப்புகழ், சுந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு, மயில்விருத்தம், வேல்விருத்தம், சேவல்விருத்தம், கந்தர் அநுபூதி என்பவை. இவற்றில் திருப்புகழ் வெள்ளம் போலப் பெருகி வந்தது. அருணகிரியார் வாக்கில். பதினாறாயிரம் திருப்புகழ்ச் சந்தப்பாக்களை அவர் பாடினார் என்று வேறு புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.

சந்தப்பாக்கள் பாடுவதில் அருணகிரிநாதருக்கு இணை அவரே என்று சொல்ல வேண்டும். திருப்புகழ்ப் பாக்கள் தமிழ்நாட்டில் வர வரச் சிறப்பெய்தி வருகின்றன. அருணகிரியார் இயற்றிய நூல்கள் யாவுமே முருக பக்தியை உண்டாக்கும் திறம் வாய்ந்தவை. கந்தர் அநுபூதியைப் பலரும் பாராயண நூலாகக் கொண்டு ஓதி வருகிறார்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு யந்திரம் அமைத்துப் பூசிக்கும் வழக்கமும் இருக்கிறது. இதனை அருண்கிரிநாதர் கிளியாக இருந்து ஓதினாரென்றும், இது ஐம்பது பாடல்களை உடையதென்றும் கூறுவர்.


'கந்தரநுபூதி பெற்றுக் கந்தரனுபூதி சொற்ற
எந்தையருள் நாடி இருக்கும்நாள் எந்நாளோ!'

-தாயுமானவர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/10&oldid=1544433" இலிருந்து மீள்விக்கப்பட்டது