பாவலரேறு பெருஞ்சித்திரனார்
43
கண்ணதாசன் முதல் சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி ஈறாக அனைத்துப் புலமைக் குஞ்சுகளையும் அடிமுடியறக் காட்டிய பண்டாரகர்க்குத் தனித்தமிழ் இயக்க எழுத்தாளர்களைக் கண்டு கண்கள் கூசினவோ என்னவோ? பாவாணரையும், அவர் வழியைப் பின்பற்றுபவர்களையும் தம் பகைவர்களாகவே மு.வ. நினைத்துப் புறக்கணித்துவிட்டாரோ? அல்லது இவர்களால் தமக்கு ஒரு பயனும் விளையப் போவதில்லை என்று கருதி ஒருக்கணித்துப் படுத்துக் கொண்டாரோ என்னவோ, அவருக்குத்தான் வெளிச்சம் ! கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அதுவும் தேய்ந்து சிற்றெறும்பாகி அதுவும் இல்லாமற் போன கதையாக மு.வ. தேய்ந்து தெ.பொ. மீ.யாகி அப்புறமும் தேய்ந்து வையாபுரியாக மாறி வருகிறாரோ, தெரியவில்லை; பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
துணிக் கூடாரங்கள்
நிலையான வீடுகளாகா !
இனி, நூல் எழுதுகின்ற வகையிலும் அதன் வெளியீட்டு வகையிலும் ஆரியரும், அவரடிமைகளும் கடைப்பிடிக்கின்ற நான்காவது தந்திரமுறை இது.
கூடியவரை இலக்கியத் துறையையும், செய்தித்தாள் துறையையும் என்னபடியான வாணிகத் தந்திரங்களைக் கைக்கொண்டேனும் கைப்பற்றிக் கொள்வதும், பற்றிக் கொண்டது கைநெகிழ்ந்து விடாமல் கவனமாக நடந்து நிலைநிறுத்திக் கொள்வதுமாகும்.
இத்துறையில் ஆரியப் பார்ப்பனரை அடித்துக் கீழே தள்ள அஃதாவது விஞ்ச - தமிழரில் ஆளேயில்லை. பெரியார் எத்தனை பேசினாலும் கரடியாய்க் கத்தினாலும் இந்த ஒரு தந்திரத்தை அவர் சரியாக விளங்கிக் கொள்ளாத கரணியத்தால், அவர் கொள்கைகளுக்கு நேர்ந்த - நேர்கின்ற இழப்புகள் பல. என்ன கரணியத்தாலோ அவர் மூளைக்கு இஃது எட்டவே இல்லை. தினமணி போலவோ, மெயில், எக்சுபிரசு போலவோ, ஒரு செய்தித் தாளை அவர் தொடங்கியிருந்தால் அவர் வீணான நடைகளில் பெரும்பகுதி மிச்சப்பட்டிருக்கும் அவர் சுற்றுச் செலவு வண்டியும் தேயாது.
நடத்தினால் தமிழனுக்குத் ‘தினத்தந்தி’ போலும் ஒரு கழிசடைத் தாளைத்தான் நடத்தத்தெரியும்; அன்றால் அச்சிட்டுப் பெரும்பகுதி விற்பனையாகாமல் திரும்பி வரும் ‘விடுதலை’ போலத்தான் நடத்தத் தெரியும் என்று வரலாறே உருவாகும்படி யானதற்குப் பெரியாரும்