பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

101


கருத்தையும் அடியொற்றித்தான் 'இயல்பினான் இல் வாழ்க்கை வாழ்பவன்' என்றார் வள்ளுவப் பெருமானார்.

இல்வாழ்க்கை வாழவேண்டிய 'இயல்பு' என்பது என்ன? இயல்பு என்பதற்கு, இயற்கை, தன்மை, உண்மை, ஒழுக்கம், நேர்மை, முறை என்றெல்லாம் பல பொருள் உண்டு. போதிய அளவு உழைத்து, உண்டு, உடுத்து, நுகர்ந்து, உறங்கி, பிறருக்கும் உதவி வாழும் வாழ்வு இயல்பான வாழ்வுதான். இக்காலத்தில் பலரிடம் செயற்கையான போலி வாழ்வே காணப்படுகின்றதன்றோ? எண்ணத்திலும் பேச்சிலும் செயலிலும் இயல்பான உண்மையின்றி, செயற்கையில் உண்மைபோல் நடிக்கின்ற போலித்தனமே காணப்படுகின்றதல்லவா? இது கூடாது. செயற்கையான போலித்தனமின்றி, இயல்பான ஒழுங்கு முறையுடன் இல்வாழ்க்கை வாழ்பவன், வேறு துறைகளில் முயல்பவர்களுக்கெல்லாம் தலைமையானவன் ஆவான் என்பதே இக்குறட்கருத்து.

இக்குறளில் உள்ள 'முயல்வார்' என்பதற்கு. உலகியல் பொருளியல் துறையில் முயலுபவர் என்னும் கருத்தில் மணக்குடவரும் தவநெறியில் முயலுபவர் என்னும் கருத்தில் பரிமேலழகர் போன்றோரும் பொருள் கூறியுள்ளனர். இயல்பான இல்வாழ்க்கையல்லாத வேறு துறைகளில் முயல்பவர் என்று நாம் பொருள் எடுத்துக்கொள்ளலாமே.

உலகில் எந்த உயிர்ப்பொருளை எடுத்துக்கொண்டாலும் ஆணும் பெண்ணுமாயிருப்பதையும், இவ்விரண்டின் சேர்க்கையாலேயே தோற்றம் ஏற்படுவதையும் நாம் கண்டு வருகின்றோம். எனவே, இயற்கைப் படைப்பின் அமைப்பு நோக்கம், ஈரினமும் இயல்பாய் இணைந்து வாழ்தலே? இவ்வாறு அமையாத வாழ்வெல்லாம் அரைக்கிணறு தாண்டும் அரைகுறை வாழ்வே! மனைவி மக்களுடன் வாழ்ந்தறியாதவன், பெரிய பணக்காரனாய் அல்லது பெரிய படிப்