பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

ஆழ்கடலில்


காக ஈட்டி மேலும் பத்துக்காசு கடன் வாங்குபவனைக்காட்டிலும், ஐம்பது காசு ஈட்டி அதில் ஐந்து காசு மிச்சப் படுத்துபவனே மேலானவன் என்ற 'மந்திரத்தை' மனத்தில் இருத்தும் மங்கை நல்லாளே சிறந்த வாழ்க்கைத்துணையாவாள். இது குறித்தே 'தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை' என்றார் ஆசிரியர். ஆகவே, மனைவி ஆடம்பரச் செலவுகளை அறவே அகற்ற வேண்டும். கணவன் அவ்வாறு செய்தாலும் அவனைத் திருத்தவேண்டும்.

இங்கே இன்னொன்றும் கவனிக்கவேண்டும். கருமித்தனமாய் இருக்கவேண்டுமென ஆசிரியர் சொல்லவில்லை. கணவனது வருவாய் வளப்பத்துக்குத் தக ஒழுகவேண்டும் என்றுதான் சொல்லியுள்ளார். எனவே, குறைந்த வருவாயானால் சிக்கனமாயிருக்கவேண்டும். நிறைந்த வருவாயானால் கூடியவரை பிறருக்கு உதவவும் செய்யலாம். இங்கே வளத்தக்காள் என்பதற்கு வேறொரு பொருளும் சொல்லலாம். அதாவது. 'கணவனது செல்வமாக இருக்கத் தக்கவள் - இவளே கணவனுக்குப் பெரிய செல்வவளம்' என்ற அழகு உரைதான் அது! இப்போது தீர்ப்பு வழங்குங்கள் - இத்தகையோளை வாழ்க்கைத்துணை என்று வாய்குளிர வழுத்துவதற்கு என்ன தடை? மேலும் துணை என்ற சொல்லுக்கு இணை - இரட்டை என்ற பொருளும் உண்டு என்பதும் இங்கே நினைவிருக்கட்டும்!.

பெண் வைத்திருப்பவர்களே! மாப்பிள்ளையின் சொந்த வருமானத்தைக் கருதிப் பெண் கொடுப்பீராக! முன்னோர் சொத்தில் பிழைக்கும் தலையில்லாத முண்டங்களுக்குப் பெண் கொடாதீர்கள் என்று எச்சரிப்பது போல் 'தற்கொண்டான் வளம்' என்னும் தொடர் அமைந்திருக்கின்றதல்லவா? பெண் பார்ப்பவர்களே! பணத்துக்காகவும் பளபளப்புக்காகவும் பெண் கட்டாதீர்கள்! பண்புக்காகப் பெண் கட்டுவீர்களாக என்று எச்சரிப்பது