பக்கம்:உத்தரகாண்டம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160   ✲   உத்தரகாண்டம்

தலவரு, அண்ணா படம் அச்சா வரஞ்சிருந்தா. அடிச்சி கைய ஒடச்சிட்டாங்க. சாமி, கச்சி வாணாம் அவனுக்கு கட வேலயே போதும்னு அழுத. அவருதான் புத்தூரு கட்டுப் போட கூட்டிட்டுப் போகச் சொல்லிப் பணம் குடுத்தாரு. இப்ப ஒண்ணில. பல்லாவரம் திடல்ல பெரி...ய கூட்டம். தோரணம் கட்டி, மைக்கு செட்டு போட்டு அட்டை வச்சி ஏற்பாடு பண்ண கூட்டியிருக்காங்க. அஞ்சுபேரு, ஆட்டோல பிரியாணி பொட்டலம் பாட்டில் எல்லாம் எடுத்திட்டுப் போனாங்களாம். நம்மபய்ய உள்ள, குந்திட்டிருந்திருக்கா பச்சை-சிவப்பு வெளக்கு வருமே அங்க சிவப்பு வரப்ப, வண்டியெல்லாம் நிப்பாட்டிட்டா, அப்ப அந்தப் பொண்ணு ஓரமாப் போயிட்டிருந்திச்சா நின்னிச்சா தெரி...ல... மோட்டார் பைக்கில, இளைஞர் அணித்தலவர் நின்னாருங்கறாங்க. சட்டுனு வண்டி கிளம்பறச்சே, அந்தப் பொண்ணக்கையப் புடிச்சி, ஓகோகோன்னு சத்தம் போட்டு இழுத்தாரு. அது வரல. இழுத்திட்டுப் போகுமுன்ன அது கீழ வுழ, பின்னாடி வந்த வண்டி சக்கரத்துல அடிபட்டிச்சின்னு பாத்தவுங்க சொல்றாங்க; என்ன நடந்திச்சோ ஆண்டவனுக்குத்தா வெளிச்சம். ஆட்டோவும் சாஞ்சிடிச்சி. அல்லாரும் ஓடிட்டாங்க. எம்பய்யனும், இன்னொரு பய, அவன் குடிப்பான்னு சொல்லுவா. ரெண்டு பேரையும் போலீசு புடிச்சி கொலக்கேசு போட்டிருக்கு, தாயி!”

அவள் கதறலில் உடலும் உள்ளமும் மட்டும் குலுங்கவில்லை. பூமா தேவியே குலுங்குவது போல் இருக்கிறது. பூமாதேவி குலுங்கிக் குமுறுகிறாள். ‘நா இன்னு என்ன சாட்சி கொடுப்பேன்’னு ஆகாசத்த பாத்து, அன்னிக்கு சீதை, குலுங்கினாளே, அது மனசில தோணுகிறது. இவ சீதையா? அஞ்சு புருசன் இருக்கிறீங்களே, இப்பிடி மானம் உரிக்கிறானேன்னு துரோபதை கதறினாளே, அந்தக் காட்சியா இது? இவள் வயிற்றில் உதித்ததெல்லாம் துச்சாதனன் வாரிசா?...

அவளை இழுத்து அணைத்துக் கொள்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/162&oldid=1050009" இலிருந்து மீள்விக்கப்பட்டது