பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


வேடம் புனையாத நேரங்களில் பக்கப் படுதாவின் அருகே நின்று நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம்.

அன்று கடல் காட்சியைப் போட்டுக்கொண்டிருந்தார்கள் முன்னல் காட்டுத் திரை விடப்பட்டிருந்தது. அனுமார் வானரங் களுடன் பாடிக் கொண்டிருந்தார்.நான் இலட்சுமண வேடத்தை கலைத்துவிட்டு, வெறும் உடம்போடு மேடையின் நடுவே நின்று காட்சி அமைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது திண்டிவனத்தில் மின்சார விளக்குகள் இல்லை. கியாஸ் விளக்கு கள்தான் போடப்பட்டிருந்தன. மேடையில் காட்சி அமைப்பைப் பார்த்துக் கொண்டிருந்த என் தலைக்கு நேராக ஒரு கியாஸ் விளக்குக் கட்டப்பட்டிருந்தது. கடல் தாண்டும் ‘அட்டை அனுமாரை அங்குமிங்குமாக இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் சுவையோடு அந்தக்காட்சியை ரசித்துநின்றேன்.

யாரோ ஒரு காட்சி யமைப்பாளர் மேடையின் நடுவே: தொங்கிக் கொண்டிருந்த கியாஸ் விளக்கை மேலே தூக்கிக் கட்ட முயன்றிருக்கிறார், விளக்கோடிருந்த நூல்கயிறு பரண்மீது எங்கோ மூங்கிலில் சிக்கித் தேய்ந்து போயிருக்கிறது. அவர் விளக்கை வெட்டி இழுத்ததும் கயிறு அறுந்து போய்விட்டது. பெரிய கியாஸ் விளக்கு அப்படியே நேராகக் கீழேநின்ற என்மேல் விழுந்தது. நான் ‘அம்மா’ என்றலறிக் கீழேசாய்ந்தேன். விளக்கு. சுக்கல் சுக்கலாக உடைந்துவிட்டது.

தந்தையின் ஆவேசம்

என் அலறல் சத்தத்தைக் கேட்டதும் தந்தையார் ஓடி வந்தார். மேலே கட்டப்பட்டிருந்த கியாஸ் விளக்கு என்மேல் அறுந்து விழுந்து விட்டதையும், நான் கீழே கிடப்பதையும் கண்டார். ஆவேசம் கொண்டார். அதற்குள் சிலர் ஓடி வந்து என்னைத் துளக்கிச் சென்றார்கள். தந்தையார் தம்மையே மறந்து விட்டார். பவுடர் போடுமிடத்திலும் வெளியேயும் போடப் பட்டிருந்த கியாஸ் விளக்குகளைத் தம் கையாலேயே அடித்து உடைத்தார். அவரைப் பிடித்து நிறுத்தச் சிலர் பெரும் பாடுபட் டார்கள். எனக்குப் பெரிய அபாயம் ஏதுமில்லை யென்பதை விளக்கினார்கள்.