பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


ஆம்; 1923 ஏப்ரல் 27ஆம் நாள் இரவு 12.30 மணிக்கு, நாங்கள் திருவண்ணாமலையில் பவளக்கொடி நாடகத்தில் நடித்து கொண்டிருந்த நேரத்தில் தந்தையார் இறைவனடி சேர்ந்தார். பவளக்கொடி நாடகத்தில் கிருஷ்ணன் மாயப் பெண்ணாகவும், அர்ஜுனன் கிழவனாகவும் வேடம் பூண்டு, பவளக்கொடியை ஏமாற்றி, வண்டு கடித்து இறந்ததுபோல் நடிப்பதுண்டல்லவா? அந்தக் காட்சியில் அர்ஜுனனப் படுக்கவைத்து, நான் மாயப் பெண்ணாக நின்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்த அதே நேரத்தில்தான், தந்தையார் இறந்திருக்கிறார்! இதையறிந்த போது இறைவனின் செயலை எண்ணி எல்லோரும் வியந்தார்கள். அப்போது பெரியண்ணாவுக்கு வயது பதினேழு. நிலைமையை அறிந்ததும் அவர் அழவேயில்லை. உள்ளே வந்து அம்மாவைப் பார்க்கவுமில்லை. அப்படியே வெளித்திண்ணையில் உணர்வற்று உட்கார்ந்து விட்டார். அவரது உள்ளத்திலிருந்த ஆயிரமாயிரம் எண்ண அலைகளால் ஏற்பட்ட உணர்ச்சியின் கொந்தளிந்பு கண்களில் தெரிந்தது. இரத்தச் சிவப்பேறி நின்ற அவரது கண்களைக் கண்டு எல்லோரும் பயந்தார்கள். அவரது அருகில் போய் உட்கார்ந்து ஆறுதல் கூறினார்கள். அம்மாவையும், ஐந்து தம்பி தங்கை மார்களையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு, தம்மேல் சுமத்தப் பெற்றதையும், அந்த எதிர் கால வாழ்வையும் எண்ணி ஏங்கினார் போலிருக்கிறது.

எங்கள் நிலை

அப்பாவின் இறுதிச் சடங்குகள் நடந்தேறின. நாங்கள் போட்டிருந்த சில நகைகளையும், பரிசு பெற்ற தங்க மெடல்களையும் தவிர வேறு ஆஸ்தி எதுவும் இல்லை. எனவே அதற்கான குழப்பங்கள் ஒன்றும் ஏற்படவில்லை. அப்பாவின் அளவுக்கு மீறிய குடியினால் அவரது ஈரலில் துவாரங்கள் விழுந்து விட்டதாயும் அதனாலேயே விரைவில் மரணம் ஏற்பட்டதென்றும் மருத்துவர் கூறினார்.

பதினாறாவது நாள் சடங்கு முடியும் வரை முதலாளி எங்களோடு தங்கியிருந்தார். மறு நாள் திருவண்ணாமலைக்குப் புறப்பட முடிவு செய்தோம். சிற்றப்பா செல்லம்பிள்ளையும் எங்கள் தாயுடன் பிறந்த மாமா செல்லமபிள்ளையும் எங்களோடுவருவதாக அறிவித்தார்கள். அம்மாவும் அதை விரும்பினார். அவர்கள் இருவருக்கும் வெளி வேலைகள் ஏதாவது கொடுப்பதாகக் கருப்பையாபிள்ளை கூறினார். கைம்மைக் கோலம் ஏற்றதாயுடனும் சிற்றப்பா, மாமா, எல்லோருடனும் மறுநாள் புறப்பட்டுத் திருவண்ணாமலை வந்து சேர்ந்தோம்.