பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194


முடித்துக் கொண்டு, மீண்டும் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தோம்.

சந்திரகாந்தா அரங்கேற்றம்

இம்முறை சந்திரகாந்தா நாடகம் எவ்வித விக்கினமும் இல்லாமல் அரங்கேறியது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், கோவையில் நேரில் வந்து ஒத்திகை பார்த்து அனுமதி கொடுக் காமல் போன ஜே. ஆர். ரங்கராஜு, இப்போது அதைப் பார்க் காமலே அனுமதி கொடுத்துவிட்டார். வாத்தியார் முதலியாரின் நாடகத் தயாரிப்பில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை.

சந்திரகாந்தா, இராஜேந்திரா முதலிய நாவல் நாடகங்களில் இப்போது கே. பி. காமாட்சி பிரதம வேடம் தாங்கினார், காமாட்சி மிகச் சிறந்த நடிகர். “இந்தியன் எடிபோலோ” என்று அடைமொழி கொடுத்து, அவர் பெயரை விளம்பரப் படுத்துவது வழக்கம், அவருடைய நடிப்பு, மற்றவர்கள் நடிப்பினின்றும் முற்றிலும் வேறுபட்டிருக்கும். கைகால்களே அதிகமாக அசைக் காமல் முகத்திலேயே உணர்ச்சிகளைக் காட்டி நடிப்பார். அவரது அற்புதமான நடிப்புத் திறமையை எல்லோரும் புகழ்வார்கள்.

காரைக்குடியில் கம்பெனியை விட்டுப்போன எம். ஆர். சாமிநாதன் மீண்டும் இப்போது கம்பெனியில் சேர்ந்திருந்தார். ஆனால் பழைய ஸ்தானம் அவருக்குக் கிடைக்கவில்லை. என். எஸ். கிருஷ்ணன் அவருடைய இடத்தைப் பிடித்துக்கொண்டதால் சாமிநாதன் வேறு சில்லரை வேடங்களே புனைய நேர்ந்தது. நாடகங்களில் இரண்டாவதாக வரும் நகைச்சுவை வேடமே அவருக்குக் கொடுக்கப் பெற்றது. சந்திரகாந்தாவில் நாவிதர் முனிசாமியும், திருக்கள்ளுர் பண்டார சந்நிதியும் கலைவாண ருக்கே கிடைத்தன. எம். ஆர், சாமிநாதனுக்கு மொந்தையூர் பண்டாரசந்நிதி வேடமே கொடுக்கப்பட்டது. நான் அவரிடம் மிகவும் அனுதாபம் கொள்வேன். ஆனால் சாமிநாதன் இதுபற்றிக் கவலைப்படாதவர் போல் காட்டிக் கொள்வார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு, அவரது மனநிலை ஒருவாறு தெரியும். எனவே அவர், எம். ஆர். சாமிநாதனிடம் எப்போதும் மரியாதை கொடுத்து, அன்புடனேயே பழகி வந்தார்.