பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247


போகும்படி சபையோர் கைதட்டுவார்கள். இந்தக் காட்சியையும் எடுத்துவிட வேண்டுமென்றார் இன்ஸ்பெக்டர்.

இன்னும் சில்லரை மாறுதல்கள் சிலவற்றைச் சொன்னார். இவற்றில் எதுவும் நாடகத்தைப் பாதிக்காதபடியால் இன்ஸ்பெக்டரின் ஆட்சேபனைகளை ஏற்றுக் கொண்டு, அப்படியே திருத்தம் செய்வதாகக் கூறி, என். எஸ். கேயும் சின்னண்ணாவும் திரும்பி விட்டார்கள். மறுநாள் நாடகம் இன்ஸ்பெக்டர் சொன்ன மாறுதல்களுடன் நடத்தப் பெற்றது.

அந்த நாளில் எங்களுக்கிருந்த உணர்ச்சியில் இன்ஸ்பெக்டரின் இந்த ஆட்சேபனைகள் நிரந்தரமாக நீடித்து நிற்கவில்லை. மறு வாரம் மீண்டும் தேசபக்தி நடைபெற்றது. அன்று போலீஸார் யாரும் வரவில்லை. எனவே இன்ஸ்பெக்டர் ஆட்சேபித்த காட்சிகளையெல்லாம் முன்னிலும் பன்மடங்கு சிறப்பாக நடத்திக் காட்டினோம். சி. ஐ. டி.கள் யாரோ வந்திருந்தார்கள் என நினைக்கிறேன். நாடகம் அன்று பெரும் கோலாகலத்துடன் நடந்தது. மறுநாள் நாலே நாங்கள் மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தோம். போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து ஏதோ கொடுத்துவிட்டுப் போனார். திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தேசபக்தி நாடகம் தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ள தடையுத்திரவு அது.

காங்கிரசுக்கு நன்கொடை

திருநெல்வேலியில் பட்டாபிக்ஷேகம் முடிந்த பிறகு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி நிதிக்காக ஒரு தேசபக்தி நாடகம் நடித்துக் கொடுத்தோம். திருமதி லட்சுமி சங்கரய்யர் தலைமை தாங்கினார். இதே போல் தொடர்ந்து பல ஊர்களில் காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தேசபக்தி நாடகத்தை எவ்வித ஊதியமும் பெறாமல் நடித்துக்கொடுத்திருக்கிறோம். எங்கள் கணக்குப்படி தமிழ்நாடு முழுவதிலும் காங்கிரஸ் கமிட்டிகளுக்கு நூற்றி ஐம்பத்தி ஏழு நாடகங்கள் இதுவரை நன்கொடையாக கடத்திக் கொடுக்கப் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பழைய காங்கிரஸ் நண்பர்கள் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம்.