பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284


ராஜ சேகரன்

பண்ணாருட்டியில் புதிதாக ராஜசேகரன் நாடகம் தயாராயிற்று. இந் நாடகம் தஞ்சை என். விஸ்வநாதய்யரால் எழுதப் பெற்றது. எம். ஆர். ராதா இருந்தபோதே நடந்த எண்ணிய நாடகம் இது. நல்ல முற்போக்கான கருத்தமைந்த நாடகம். இந்நாடகத்திற்கு நான் சில பாடல்களும் எழுதினேன். காட்சிகள், உடைகள் ஒன்றும் புதிதாகத் தயாரிக்க வசதி இல்லை. என்றாலும் நாடகம் சிறப்பாக நடந்தது.நான் ராஜசேகரனாக நடித்தேன். எங்கள் குழுவில் அப்போது பிரதம பெண் வேடதாரியாக விளங்கிய பி. எஸ். திவாக்ரன் ராஜகுமாரி பத்மலோசனியாக நடித்தார். திவாகரன் நல்ல அழகும் இனிய குரலும் வாய்ந்த இளைஞர். அவருடைய தோற்றம் பெண்போலவே இருக்கும். பல நாடகங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார், மிகச் சிறந்தநடிகர், திவாகரன் இப்போது சென்னையில் ‘செக்ஸ்போன்’ என்னும் இசைக் கருவியை மிக அருமையாக வாசித்து வருகிறார், மலையாளப் படங்களுக்குச் சங்கீத டைரக்டராகவும் இருந்து வருகிறார்.

ராஜசேகரன் நாடகத்திற்கும் வசூல் இல்லை. பண்ணாருட்டியை விட்டு வேறெங்கும் போக முடியாமல் கஷ்டப்பட்டோம். இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்த எங்கள் மூத்த தங்கைக்கு வரன் பார்ப்பதற்காகப் பெரியண்ணா அடிக்கடி ஊருக்குப் போக வேண்டிருந்தது. பாலகிருஷ்ண சாஸ்திரி, கம்பெனிக்கு மானேஜராக வந்து சேர்ந்தார்.

சாஸ்திரியின் நிருவாகம்

சாஸ்திரியார் கள்ளம் கபடு இல்லாதவர்; நேர்மையானவர்; ஆனால் எப்போதும் வாய்த்துடுக்காகப் பேசுவார். இந்தப் போக்கு கம்பெனியில் யாருக்கும் பிடிக்கவில்லை. எல்லோரும் அவருடன் வெறுப்போடு பழகினார்கள். இதைக் குறித்துப் பெரியண்ணாவிடம் புகார்செய்யவும் ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. எனவே எல்லோரும் பொருமிக் கொண்டு சும்மா இருந்தார்கள்.