பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300



ராஜா இரண்டு முறை நடித்துக் காண்பித்தார். எனக்கு என்னவோ போலிருந்தது. ‘பெண்ணின் மீது கை வைத்துத் தொட்டு நடிக்க வேண்டிய இந்த எழவை எல்லாம் ஸ்டுடியோவில் படம் பிடிக்கும் போது வைத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று ராஜாவை மனத்திற்குள்ளாகவே சபித்தேன். பட முதலாளிகளில் ஒருவரான எஸ். கே. மொய்தீன் எதிரில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். என் நண்பர்கள், சகோதரர்கள் எல்லாரும் எதிரே வீற்றிருந்தர்கள். எல்லோருடைய கண்களும் என்மீதே பதிந்திருந்தன. எனக்கோ ஒரே கூச்சம். ராஜா ‘உம் ரைட்’ என்றார். நானும் மனதைத் திடப் படுத்திக்கொண்டு அவர் நடித்துக் காண்பித்தவாறே நடிக்க முயன்றேன். ருக்மணியின் முகவாய்க்கட்டையைப் பிடித்துத்திருப்பினேன். எங்கள் இருவருடைய கண்களும் சந்தித்தன. அவ்வளவுதான். ருக்குமணி சிரிக்கத் தொடங்கினார். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. எவ்வளவோ முயன்றும் அந்தச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ருக்குமணிக்கும் அதே நிலைதான். அவருடைய முகம் நாணத்தால் சிவந்துவிட்டது. நல்ல வேளையாக அன்று பெரியண்ணா மட்டும் இல்லை. ராஜா இரண்டுமுறை கோபித்துப் பார்த்தார், நாங்களும் சிரிக்காமல் நடிக்க ஆன மட்டும் முயன்றோம். ஒன்றும் பலிக்கவில்லை. நாலைந்து முறை இவ்வாறு எங்கள் முயற்சியில் தோல்வி ஏற்பட்டதும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். கோபித்தும் பயனில்லாததைக் கண்ட ராஜாவும் சிரித்து விட்டார். இவ்வாறு அன்றைய ஒத்திகை சிரிப்பிலேயே முடிந்தது. விஷயம் பெரியண்ணா காதுக்கு எட்டியதும் மிகவும் கோபப்பட்டார். ‘ஏன் அப்படிச் சிரித்தோம்?’ என்பது எனக்கே புரியவில்லை. “இதுதான் காதல் சிரிப்பு” என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்.

காப்பியடிக்காதே!

மறுநாள் மிகத் துணிவோடு ஒத்திகையில் நடித்தேன். ராஜா எப்படிச் சொல்லிக் கொடுத்தாரோ அப்படியே நடித்தேன். உடனே ராஜா கலகலவென்று சிரித்துவிட்டார்.

“நான் செய்வதை அப்படியே காப்பியடிக்காதே. அது நடிப்பல்ல. சொல்லுவதைக் கேட்டுப் புரிந்துகொண்டு, அந்தக்