பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

367


என்று மீண்டும் அழுத்தமாகக் கூறினார். தொடர்ந்து நான் பூலோகரம்பை படப்பிடிப்பில் கலந்துகொண்ட போதெல்லாம் இதை நினைவுப் படுத்திக் கொண்டே இருந்தார். எனக்கு அச்ச மாகத்தான் இருந்தது. ஒரு நாள் நான் சின்னண்ணாவிடம் கலைவாணர் கூறியதைத் தெரிவித்தேன். உடனே அவர் சிரித்துக் கொண்டு, “நம்மைப் பாதிக்கும் வகையில் என். எஸ் கிருஷ்ணன் எதையும் செய்வானென்று நான் நினைக்கவில்லை. நாம் படத் திற்குக் கூப்பிடவில்லையே என்ற கோபத்தில் ஏதோ பேசலாம்; இதெல்லாம் உரிமையோடு வரும் கோபம் ஆனால் நம்மைப் பொறுத்தவரை தவறான காரியம் எதுவும் நடைபெறாது’ என்றார். அவர் சொன்னபடியேதான் நடந்தது. இறுதிவரையில் கலைவாணர் உதட்டளவில் கோபத்தை வைத்துக் கொண்டிருந்தாரே தவிர அவரது உள்ளம் துய்மையாகதான் இருந்தது என்பதைப் பின்னால் உணர்ந்தேன்.

பாலக்காடு முகாமில் குமாஸ்தாவின் பெண் ‘அவுட்டோர்’ காட்சிகள், பெரும்பாலும் கல்பாத்தி ஆற்றிலும், பாலக்காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எடுக்கப்பட்டன. பூலோக ரம்பை படப்பிடிப்பு முடிந்து விட்டது. குமாஸ்தாவின் பெண்ணில் சில சில்லரைக் காட்சிகளே எடுக்க வேண்டியிருந்தன. டைரக்டர் பி. என். ராவ் இருபடங்களையும் இயக்கி வந்ததால் இயன்றவரை முழுமையாக ஒத்துழைத்தார்.

இந்து முஸ்லீம் கலவரம்

படப் பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டதால் கம்பெனி மதுரைக்குச் சென்றது. நான் குழுவினரை வழியனுப்பிவிட்டு கோவை சென்றேன். எனக்கு மட்டும் இரண்டொரு நாள் படப்பிடிப்பு இருந்தது. குழுவினர் மதுரைக்குச் சென்ற மூன்றாம் நாள், மதுரையில் பலத்த இந்து முஸ்லீம் கலவரம் நடப்பதாகப் பத்திரிக்கையில் படித்தேன், பெரியண்ணாவின் கடிதமும் வந்தது. மதுரையில் கலவரம் நடப்பதால் நாடகம் சினிமா முதலிய கேளிக்கைகளை யெல்லாம் தடை செய்திருப்பதாகவும் ஒரு மாத காலம் இராஜபாளையத்தில் நாடகம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் எழுதியிருந்தார். என் மனம் கவலைப்பட்டது. வட