2.கழுதை கேட்கிறது
இன்று ‘கழுதை, கழுதை’ என்று உங்களால் இகழப் பட்டாலும், ஒரு காலத்தில் மன்னாதி மன்னர்களால் கூட மதிக்கப்பட்டு வந்த ஜீவன் நான்.
அந்த நாளில் ஒட்டகங்களுக்கு இருந்த கவுரவம் எங்களுக்கு இருந்தது.
அப்போதிருந்த மன்னர்களில் பலர் எங்கள் மேல் படைக்கலன்களை ஏற்றி, எங்களையும் போர்க்களங்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.
தங்களால் வெல்லப்பட்ட பகைவர் நிலங்களில் எங்களை வைத்து ஏர்பூட்டி உழுது, வரகும் கொள்ளும் விதைத்துத் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.
அந்தப் பெருமையெல்லாம் போய், இன்று உங்களால் மிகவும் கேவலமாக மதிக்கப்படும் ஜீவன்களில் ஒன்றாக நானும் ஆகிவிட்டேன்.
என் பெயர், தோற்றம், குரல் எல்லாமே உங்களுடைய நகைச்சுவைக்கு உரியனவாகிவிட்டன.
உங்களைப் பார்த்து என்னுள் சிரிக்க முடியாமல் இருப்பதால்தானே என்னவோ, என்னைப் பார்த்து நீங்கள் ‘சிரியோ சிரி’ என்று சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.