பக்கம்:ஓ மனிதா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ஓ, மனிதா!

இல்லை; ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று ஏதோ ஒரு காலத்தில் நீங்கள் படித்ததுகூட, ‘படிக்காவிட்டால் வாத்தியார் குட்டுவாரே!’ என்ற பயத்தால் தானே?

யாராயிருந்தாலும் சரி, இந்த உலகத்தில் அன்பு செலுத்தக்கூடப் பணம் வேண்டும் என்பதை நான் அறிவேன், கையில் ஒரு முழம் பூகூட இல்லாமல் ‘என் அன்பே!’ என்று மனைவியை நெருங்கினால்கூட, ‘ஆமாம் போங்கள், இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை’ என்று அவள் எரிந்து விழுவாள் என்பதும் எனக்குத் தெரியும். அந்தக் குறைக்கு நான் இருந்த வீட்டில் இடமில்லை. ஏனெனில், நான் இருந்த வீடு ஓர் ஐ. ஏ. எஸ். அதிகாரியின் வீடு, சம்பளம், கிம்பளம், அது இது என்று எத்தனையோ வகைகளில் அவருக்குப் பணம் வந்து கொண்டே இருந்தது. அதனால் ‘லட்சுமி கடாட்சம்’ என்கிறீர்களே, அந்தக் கடாட்சம் அவருக்குப் பரிபூரணமாக இருந்தது.

அந்த ஆபீசருக்கு ஓர் அண்ணன். அவர் ஏதோ ஒரு கம்பெனியில் குமாஸ்தா. சம்பளம் பற்றாக்குறையாயிருந்தாலும். குழந்தைகள் விஷயத்தில் அவருக்குப் பற்றாக்குறை இல்லை, அதில் அவர் ‘நவீன குசேல’ராயிருந்தார். எப்போதாவது ஒரு சமயம் கண்ணன் வீட்டுக்கு ஒரு பிடி அவலோடு வந்த குசேலரைப் போல அவர் உள்ளூர் பிஸ்கட் ஒன்றை வாங்கிக் கொண்டு, தம்பியையும் தம்பியின் குழந்தையையும் பார்க்க வருவார். ‘யார் யாரோ என்னைப் பார்க்க வருவார்கள். வீட்டுக்கு முன்னாலிருந்து என் மானத்தை வாங்காதே, பின்னால் போய் உட்கார்!’ என்பார் தம்பி. ‘அது எனக்குத் தெரியாதா?’ என்று பல்லைக் காட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/45&oldid=1370775" இலிருந்து மீள்விக்கப்பட்டது