2. கம்பனுடைய கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் கம்பனுடைய காவியம் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறது. அதனால் அதை அவருடைய கடவுட் கொள்கை பற்றிய ஆய்வைத் தொடக்கமாகக் கொள்வோம். கடவுட் கொள்கையும் சமயக் கொள்கையும் மனித சிந்தனை வளர்ச்சியில் ஒரு அடிப்படையான போக்காகும். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு” என்று தொடங்கும் வள்ளுவப் பெருமான் இன்னும் வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன் பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான். அறவாழி அந்தணன் எண்குணத்தான் என்றெல்லாம் கடவுள் வாழ்த்துப் பாடல்களில் இறைவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இளங்கோவடிகளார் கடவுள் வாழ்த்து என்றல்லாமல் மங்கல வாழ்த்து எனப் பாடி தனது காப்பியத்தைத் தொடங்குகிறார் "திங்களைப் போற்றுதும், திங்களைப்போற்றுதும்" என்றும், “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்றும், “மாமழை போற்றுதும். ഥrഥങ്ങഴ போற்றுதும்” என்றும் “பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்” என்றும், திங்களையும், ஞாயிறையும், மாமழையையும், பூம்புகாரையும் முதன்மையாக வைத்து நாட்டையும், நகரையும், உலகையும், அரசனையும் பாடி தனது காப்பியத்தைத் தொடங்குகிறார். பாரதி வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத்தாயை வணங்குது மென்போம்” என்று பாரதத்தாய் வணக்கதை முதன்மைப் படுத்திப் பாடியுள்ளார். பாரதி, நாட்டிலுள்ள மக்கள் வழிபடும் எல்லாக் கடவுளர்களைப் பற்றியும் பாடினாலும் தேசத்தைத் தெய்வமாக முதன்மைப் படுத்துவதை மறக்கவில்லை.