பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்



சமயத்தின் பெயரால் பல பிரிவுகளும் வேறுபாடுகளும் உருவாகிக் கொண்டே போனதை எதிர்த்து, அவர் அந்த இயக்கத்தை விட்டு விலகினார். ஆனால் “எனக்கென்று ஒரு சமயம் உள்ளது ‘என் சமயம் மனிதன் என்பதே” என்று உலகுக்கு உணர்த்தினார்.

நான் மனிதன்; சமய வேறுபாடுகளைக் கடந்தவன்; தேச பக்தியிலும் நான் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன் என்றார். நாடுகளுக்கு இடையே வளரும் பகையைத் தாகூர் வெறுத்தார். ஆனால், நாட்டிற்குத் தொண்டாற்றுவதே பிறவியின் பணி என்று நம்பினார். அதனால், தான் அவர் எந்த நாட்டுப் பற்றாளர்களுக்கும் குறைந்தவர் அல்லர் என்பதைப் பல நேரங்களிலே நிரூபித்துக் காட்டினார்.

தேசத்திற்கு யார் தீங்கிழைத்தாலும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவற்றை உடனுக்குடன் கண்டிப்பதையே தனது தேசத் தொண்டடென்றும் கருதினார். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் அவர் நாட்டு மக்களுக்கு விரோதமாக நடந்தவரல்லர். அவருடைய நெஞ்சம் பகைக்கும் அன்பு காட்டும் மனமாக இருந்தது.