பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

காற்றில் வந்த கவிதை


கத்தி சுழட்டுறது-சின்னர் வேகம்
கார் மின்னல் மின்னுது பார்
ஆனையின் கூட்டத்திலே-ஒரு நல்ல
ஆளி வந்து பாய்ந்தது போல்
ஆடுகளின் கூட்டத்திலே-ஒரு நல்ல
வேங்கை வந்து பாய்ந்ததுபோல்
முன் வீச்சுக் காயிரமாம்-அங்கே அவர்
பின் வீச்சுக் காயிரமாம்
வெள்ளரிக்காய் வெட்டுவதுபோல்-சின்னருந்தான்
வீசி வீசித் தள்ளுராரு


சின்னசாமி கத்தி வீசினால் கார் மின்னல் மின்னுவதைப் போலிருக்குமாம். அவர் போர்க்களத்திலே புகுந்தால் ஆடுகளின் கூட்டத்திலே வேங்கைப்புலி பாய்ந்தது போலிருக்குமாம். வெள்ளரிக்காயை வெட்டுவது எவ்வளவு எளிது! அவ்வளவு எளிதாக அவர் பகைவர்களை வெட்டி வீழ்த்துவாராம்.

குன்றுடையான் கதை இன்றும் கொங்குநாட்டிலே மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. நாடோடிப் பாடல் வகையிலே இது மிக நீளமானது. இதன் மூலம் வரலாற்று உண்மைகளையும் காணலாம்.