பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 385


ஆனால் வாழ்வோரே காதலாக்குகின்றனர். மற்றவர்கள் காதற் பயனின்றி வையகத்திற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். வையகத்திற்கு ஆள் சேர்ப்பதில் செயற்கை முறை வந்தாலும் வரலாம். ஆனால் உயிர்களைத் தழைக்கச் செய்து வளர்க்கும் காதலுக்கு மாற்றாகச் செயற்கைமுறை வரமுடியாது. அதனாலன்றோ பாரதியும்,

"காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”

என்று கூறுகின்றார். ஆதலின் வையகத்தை வாழச் செய்யும் காதலே வள்ளுவம் காட்டும் காதல்.

"வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி"

(1192)

என்பது குறள்.

கனவுலக வாழ்க்கை

மனித வாழ்க்கை விசித்திரமானது. நாழிகைக்கு நாழிகை ஆயிரம் ஆயிரம் ஆசைகளால் அலைமோதப்படுகின்றோம். இத்தகைய வாழ்க்கையில் கனவும் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. மனிதனுடைய ஆசை உலகம் அவன் அயர்ந்து உறங்கும்பொழுதும் விடுவதில்லை. உடல் உறங்கினாலும் உணர்வுப் புலன் வேலை செய்கிறது; கற்பனை செய்கிறது. வாழ்க்கையைப் பற்றிய கனவு காண்கிறது. இந்தக் கனவு, நடைமுறைக்கு வருமா? வராதா? என்பது ஆண்டாண்டுக் காலமாக நம்முடைய சமுதாயத்தில் கேட்கப்பட்டு வரும் கேள்வி. இதற்கு அறுதியிட்ட விடையை நாடு இன்னும் அறியவில்லை. ஆனாலும் விடை வராமலும் இல்லை.

தி.25.