பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மனம், இயல்பாக யாதானும் ஒன்றைப் பற்றிக் கொண்டேயிருக்கும் இயல்பினது. அங்கனம் மனம் பற்றும் பற்றின் வாயிலையே, எண்ணமும் ஏற்றுக் கொண்டு இயங்கக் கூடும். இங்ஙனம் செயற்படும் பொழுது பற்றிய பொருளின் அமைப்பிலேயே செயற்படாது. பற்றப் பெற்றது மிகச் சிறந்ததாயினும் ஊழ் கறைப்படுத்த இயலும், கறைப்படுத்தக் கூடும்.

சாதாரணமாக நல்லோருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்து அவருடன் பழகினாலும் அந்நன்மையை எடுத்துக் கொள்ளாமல், அந்நன்மையையும், தீமையாக்கிக் கொள்வது போலச் செல்லுழிச் செல்லும் மனம் தொழிற்படும்.

அதாவது நல்லோருடனும் கூட, முழுமையாக, ஈடுபாட்டுடன் உளம் ஒன்றிப் பழகாமல் இருப்பது. ஏதோ ஒரு காரியத்தை அடையும் நோக்கத்தில் - பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் புகுவது.

பயன்படுதல் வாழ்க்கையின் நியதி; வாழ்க்கையில் தவிர்க்க முடியாத தேவை. ஆனால் பயன்படுத்திக் கொள்ளுதலைவிட பயன்படும் நிலையில் அமைதலே நன்று. பயன்படுத்திக் கொள்ளுதலில் செயற்கையும் உண்டு. இது ஊதிப்பழுக்க வைத்த பழம் போன்றது. பயன்படுதல் என்பது இயற்கையில் கனிந்த பழம் போன்றது.

நெறிவழிப்பட்ட முறையில் தனிமனித வாழ்வியலும் சமுதாய இயலும் அமைந்து இயங்கும்பொழுது பயன்கள் தாமே விளையும். ஆங்கு, தருவாரும் பெறுவாரும் இல்லை.

ஆதலால், நல்லோரைப் பயன்படுத்திக் கொள்ளல் பேறு. பயன்படுதல் நிலையில் ஊழின் அமைவு நல்லூழாக அமையும். அப்பயன்பாட்டுக்கு ஏற்ப திரும்பப் பயன்பெற்று விட்டால் நல்லூழாக அமையாது.