பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருக்கக்கூடிய நல்ல அரசை முதற் குறிக்கோளாகக் கொண்டார்.

நாடு எவ்வளவு சிறப்புற்றிருந்தாலும் வீடு சிறப்பாக அமையாது போனால் மானிட வாழ்க்கை சிறப்பெய்த முடியாது. நல்ல தலைமுறைகள் தோன்றா நாடு சிறப்புற நல்லரசு தேவை. வீடு சிறப்புற நல்ல மனைவி தேவை.

தெளிவாகச் சொன்னால் நாட்டிற்கே வலிமை சேர்ப்பது நல்ல மனைவிதானே! எப்படி? நாட்டிற்கு மன்னவன் ஆனாலும் அவனுக்கும் மனைவி உண்டு. அவள் நல்லவளாக இல்லாது போனால் நாட்டுப்பணி முட்டுப்படும். ஆக வீட்டிற்கும் நாட்டிற்கும் மட்டுமல்லாது எதிர்கால வரலாற்றுக்கும் விழுப்பம் சேர்க்கும் நல்ல மனைவியை உயர்ந்தோர் போற்றுதல் இயற்கை.

இளங்கோவடிகள் உயர்ந்தோரில் உயர்ந்தவர். எனவே பத்தினிப் பெண்டிரைப் பாராட்டுதலை இரண்டாவது குறிக்கோளாகக் கொண்டார். நாட்டை ஆளும் அரசனாயினும், வீட்டையாளும் மனைவியாயினும் அவர்தம் ஊழ், அவர்களை வழி நடத்துகின்றது.

ஆதலால், நாட்டில் வாழ்வோரும், வீட்டில் வாழ்வோரும் ஊழின்பால் கவனத்துடன் இருக்க வேண்டும். நல்லூழாக அமையும்படி அரிய முயற்சிகளை மேற்கொண்டு அமைத்துக் கொள்ளவேண்டும். அங்ஙனம் நல்லூழாக அமைத்துக் கொள்ளத்தவறின், அல்லல்பட வேண்டிவரும். முன் முயற்சி மேற்கொள்ளாது பின் இரங்குவதில் என்ன பயன் என்று மனித குலத்தை எச்சரித்து வழி நடத்த, குறிக்கோளைக் கொள்கின்றார்.

“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்பது இளங்கோவடிகள் வாக்கு,

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்.”

என்றார் திருவள்ளுவர்.